மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

செவ்வாய், 6 மார்ச், 2018

சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)

ண்டனில் இருந்து வெளிவரும் 'காற்றுவெளி' மின்னிதழில் வெளியான சிறுகதை இது. என் சிறுகதைகள் சற்றே நீளமானவைதான்... அதிகம் கவிதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு இதழில் மிகப்பெரிய கதைக்கு நான்கு பக்கங்கள் ஒதுக்கிப் பிரசுரித்திருக்கிறார்கள். இதுதான் காற்றுவெளிக்கு நான் அனுப்பிய முதல் சிறுகதை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்..

சிறுகதையைப் பிரசுரித்த காற்றுவெளி ஆசிரியர் சோபா மற்றும் திரு. முல்லை அமுதன் அவர்களுக்கு நன்றி.


காற்றுவெளி வாசிக்கசொடுக்குங்கள்...----📄 

*********

நெஞ்சக்கரை

'து புள்ளயாருபட்டியிலதான் இருக்குதாம்'

செலுவஞ் சொன்ன வார்த்த எனக்குள்ளே முன்னுக்கும் பின்னுக்குமா போயி வந்துக்கிட்டிருந்துச்சு.

'புள்ளயாருபட்டியிலயா... அங்கயா இருக்கா அவோ...?' என என்ன நானே பல தடவ கேட்டுக்கொண்டேன்.  வெவரமாச் சொல்லுடான்னு சொன்னா வயல்ல ஆளுவ களயெடுக்க வந்திருக்காவோ... வெவரமா பொறவு சொல்லுறே... வயல்ல ஆளவுட்டுட்டு இங்கன ஒக்காந்து கத பேசுனா ஒங் கொழுந்தியா மத்தியானத்துக்கு சோறு போடமாட்டான்னு பாதியைச்  சொன்னதோட  எனக்குள்ள தீயப்பத்த வச்சிட்டுப் பொயிட்டான். இந்தச் செலுவப்பய அப்பந்தொட்டு இப்பவரக்கிம் இப்புடித்தான் எதயிம் முழுசாச் சொல்லமாட்டான். அவனுக்கு இப்புடி பாதியச் சொல்லி தவிக்கவச்சிப் பாக்குறதுல தனிச்சந்தோசம்...  இனி எப்ப வந்து அவன் சொல்லுறது...?'

'ஏலா... சுதா... மேல வீட்டுக்குப் போயி செலுவய்யா இருந்தான்னா ஐயா கேட்டாகன்னு மூக்குப்பொடி டப்பாவ வாங்கிக்கிட்டு ஓங்கட்ட எதோ முக்கியமாப் பேசணுமின்னு ஐயா வரச்சொன்னாகன்னு சொல்லிட்டு வா'ன்னு பேத்திய போச்சொன்னா அது டிவிப்பொட்டிக்கு முன்னால ஒக்காந்துக்கிட்டு நருவுசா நகரமாட்டேங்கி...

'இந்த டிவிப்பொட்டி புள்ளயல நல்லாக்கெடுத்து வச்சிருக்கு... ஒரு வேல செய்ய மாட்டேங்கிதுக... எந்த நேரமும் அதக்கட்டிக்கிட்டுத்தான் அழுவுதுக... எப்பப்பாத்தாலும் பாட்டுத்தான் போடுறானுவ...  அதுவும் உருப்படியான பாட்டுக்கூட இல்ல... முக்கலும் மொணங்கலுமா... அதத்தானே இந்த புள்ளய விரும்பிப் பாக்குதுவ...இல்லேன்னா அழுகாச்சி நாடவம் போடுவானுக... இதுகளோட ஒக்காந்து ஒக்காந்து சரவணேமீனாச்சி பாக்க ஆரம்பிச்சிட்டேன். மவமுட்டு சின்னது ஒண்ணு இருக்கி... நாலு வயசுதான் ஆவுது... அது அத்தாரு... உத்தாருன்னு என்னமோ பாட்டுப் போட்டா அந்தக்குதி குதிக்கிது. நமக்கெங்க பிரியிது இப்ப வார பாட்டுக... ம்... கலிகாலம் என்னத்த சொல்ல...'

கயித்துக் கட்டிலிலிருந்து எழுந்து மண்பானத் தண்ணிய சொம்புல மோந்து குடிச்சேன். 'மம்பானத் தண்ணியில வெட்டிவேரு போட்டுக் குடிக்கிறது வெயிலுக்கு ஒரு சொகந்தே... இப்ப அயிசுப் பொட்டியில வச்சி எடுத்துக் குடிக்கிற தண்ணி தொண்டக்குழிய மட்டுந்தான் சில்லுன்னு வைக்கிம்... ஒரு சொவயுமிருக்காது. அடுப்படியில சனி மூலப்பக்கமா ஆத்து மண்ணள்ளிப் போட்டு அது மேல மம்பானய வச்சி ஊத்தி வச்சிருக்க தண்ணியக் குடிச்சா ஒடம்பெல்லாம் சில்லுன்னு வக்கிறதோட என்ன சொவ... கம்மாத் தண்ணியவுட மழத்தண்ணியா இருந்தா இன்னுஞ் சொவ கூடத்தான் இருக்கும்... குடிச்சவனுக்குத்தா இதோட அரும தெரியும்'

'இதுககிட்ட சொன்ன எந்தக்காரியமும் நடக்காது.. நாமதான் அவமூட்டுக்குப் போவனும் போல... வெரட்டி வெரட்டிப் போனமுன்னா ரொம்ப பிகு பண்ணுவான்.... இந்தா புள்ளயாருபட்டியிலதான் இருக்கா நமக்குத் தெரியல... நாலெடத்துக்கு வேலக்கிப் போனாமட்டும் போதுமா... ஊரு ஒலவத்துல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சிக்காம இருந்து என்னத்த சாதிக்கப் போறேன்னு அப்பத்தா அடிக்கடி சொல்லும்... செலுவத்துக்கு ஊரு ஓலகத்துல நடக்குறதெல்லாம் அத்துபடி.. எப்புடித்தான் அம்புட்டு நீசயுந் தெரிஞ்சிப்பானோ தெரியல... நமக்கு வூட்டுக்குள்ள நடக்குறதுகூட நறுக்காத் தெரியமாட்டேங்கி... இதுல நாட்டுல நடக்குறது எங்குட்டுத் தெரியும்...'

"ஏலா... செலுவமூட்டு வரக்கிம் பொயிட்டு வாரேன்" என பேத்தியோடு டிவி பாத்துக்கிட்டு படுத்துக்கெடந்த எம்பொண்டாட்டி ராஜாத்திக்கிட்ட சொல்லிட்டு துண்ட ஒதறி தோள்ல போட்டுக்கிட்டு மேலத்தெருப் பக்கமாப் போனே.

'வா லாசு... ஒக்காலு...' என்றான் செலுவம் வாய்க்குள் இருந்த சோற்றோடு... தட்டுல மோர்ச்சோத்துல சின்ன வெங்காயம் மெதந்தது. வாயிலிருந்த சோத்த மென்னு விழுங்கிட்டு சொம்புத் தண்ணிய மடக்கு மடக்குன்னு குடிச்சிட்டு ஒரு செருமலோட, 'இப்பத்தா வயல்லயிருந்து வந்தே... வெயில்ல நின்னது மசண்டய வந்திருச்சு... வெயிலாவா போடுது... தயிருக் கஞ்சியில ஊறுகா போட்டு, பேத்தியா உறிச்சிப் போட்ட சின்ன வெங்காயத்த கடிச்சிக்கிட்டு  குடிச்சதுந்தே நல்லாருக்கு. வெயில்ல நிக்கமுடியலன்னு சொல்லிக்கிட்டு வயல்ல களயெடுக்கிற ஆளுவல விட்டுட்டு இங்கிட்டு வந்துட்டா, ஊருக்கத பேச ஆரம்பிச்சிருவாளுக... இன்னக்கி கூலி எம்புட்டு ஆயிப்போச்சி பாத்தியா... இந்தக் கூலிக்கே ஆளுக்கெடக்கல... ஊருக்கு முன்னாடி  நீ களயெடுத்து தப்பிச்சிக்கிட்ட... நல்லவேள எலங்க அகதிய இங்குன இருக்கதால ஏதோ அதுக வருதுக.... அதுகளும் இல்லன்னா நாமதான் கள எடுக்கணும் போல... ஆளும்பேருமா நின்னு எடுத்தா வேல சீக்கிரம் முடியுமில்ல... அதான் அவுக கூட நானும் ஒங்கொழுந்தியாவும் நின்னு களயெடுத்தோம்... இன்னங் கொஞ்சக் காலத்துல வெவசாயமே இல்லாமப் போயிடும் பாரு...  " என்றபடி வாயில் சோத்தை அள்ளி வைத்தான்.

வாயிலிருந்த சோத்தை முணுங்கிட்டு பேச்சைத் தொடர்ந்தான் "வெயிலுக்கு எதமா கஞ்சியத்தவர வேறெதக் குடிக்க முடியுஞ் சொல்லு... அதுவும் எருமத் தயிரும் சின்ன வெங்காயமும் சேத்துச் சாப்பிட்டா சொர்க்கந்தானேப்பா... கயித்துக்கட்டில வேப்பமரத்தடியில போட்டு படுத்தா சும்மா தூக்கம் சொவமா வருமில்ல" என சிலாகித்துச் சொன்னவன் "ஆமா...என்ன இந்த நேரத்து வந்துருக்கே... மூக்குப்பொடி வேணுமாக்கும்... டப்பால கொஞ்சந்தேங் கெடக்கு... இன்னிக்கி சாந்தரம் டவுனுக்குப் போயில பொடிமட்ட வாங்கிட்டு வரணும்... ஏ கெவுரி... பெரியய்யாவுக்கு அந்த மாடத்துல இருக்க மூக்குப்பொடி டப்பாவ எடுத்துக் கொடு" என்று சொல்ல, கெவுரி அதை எடுத்தாந்து நீட்ட, மூடியைத் திறந்து உள்ள கெடந்த பொடிய ஆள்காட்டி வெரலால் கொஞ்சமாக மேலிழுத்து கட்டை விரலால் மெல்லப் பிடித்து ஒரு உதறு உதறி மூக்கில் வைத்து இழுத்தேன். நான் உதறியதில் பறந்த பொடிக்கு கெவுரி 'அச்சுக்' எனத் தும்ம, நான் 'ம்க்கும்...' எனச் செருமி மூக்கை தோள்ல கெடந்த துண்டால தேய்த்துக் கொண்டேன்.

'சரி.. சரி.. வேமாய்ச் சாப்புட்டு வா... ஒங்கிட்ட கொஞ்சம் பேசணும்...' என்றேன் மெல்ல.

"அதா சேதி... அதான என்னடா எலி அம்மணத்தோட ஓடுதேன்னு பாத்தேன்... காலயில சொன்னதுலருந்து சோறு தண்ணி எறங்கலயோ... அப்பவும் சாப்புடாமக் கெடந்த பயதான நீயி..." எனச் சிரித்த செல்வம் தட்டைத் தூக்கி அதிலிருந்த தண்ணிய அலசிக் குடிச்சிட்டு ஏப்பம் விட்டபடி தட்டிலேயே கையைக் கழுவ, கெவுரி தட்டை எடுத்துக் கொண்டு போனது.

"ம்... ஒனக்கு வெவரந் தெரியணும்... அம்புட்டுத்தானே..." என்றபடி தூணில் சாய்ந்து கொண்டு பக்கத்தில் இருந்த வெத்தலைப் பொட்டியிலிருந்து கற்பூர வெத்தலையை எடுத்து காம்பு கிள்ளி, பின்பக்கமாக சுண்ணாம்பு தடவி, தொடயில வச்சிக்கிட்டு, களிப்பாக்கெடுத்து பாக்குவெட்டியால் வெட்டி வாயில போட்டுக்கிட்டு "வெத்தல பொடுறியா? எனக்கு இந்த பாக்கெட்டு பாக்குல்லாம் பிடிக்கிறதில்லை... தொவப்பில்லாம இனிச்சிக்கிட்டு" என்றபடி வெத்தலப் பெட்டிய நீட்டினான்.

"வாணாம்... எனக்கு அவோ புள்ளயாருபட்டியியலதான் இருக்காளான்னு தெரியணும்... எதயுமே பாதியில சொல்லி பரிதவிக்க வக்கிறத நீ இன்னமும் விடல..." என்றேன் கோபமாக.

"எதுக்கு உனக்கு இம்புட்டுக் கோவம்... எத்தன வருசமாச்சு... இனி அவோ எங்க இருந்தா ஒனக்கென்ன... எதுக்கு தேவயில்லாத வேல..அவளுக்குன்னு ஒரு குடும்பமிருக்கு... அதத் தெரிஞ்சிக்க... அன்னக்கி ஒன்னால அவ சொன்னத செய்ய முடியல... அப்ப குடும்பங் கண்ணுல தெரிஞ்சிச்சி... இப்ப குடும்பந் தெரியலயாக்கும். அது செரி... இப்ப அவளப் போயி பாத்து... என்ன பண்ணப் போற... விட்டுட்டுப் போவியா... நாஞ் சொன்னத தூக்கிகிட்டு வெயில்ல விழுந்து படுக்காம வெவரங்கேக்க ஓடியாறே..." வெத்தலையை மென்டபடி சிரிச்சிக்கிட்டே கேட்டான்.

எனக்குச் சுள்ளுன்னு வந்துச்சு பாக்கலாம் "அப்பொறம் என்ன மசுத்துக்கு எங்கிட்ட சொல்ல வந்தே... பொறவு சொல்றேன்னு சொன்ன வாயி எந்த வாயி... இந்த மசுத்தைச் சொல்லமா இருந்திருந்தா நா எதுக்கு நாயி மாதிரி இங்க வரப்போறேன்..." என்றபடி கோபமா எந்திரிச்சி துண்ட ஒதறினேன்.

"யேய் இருப்பே... இந்த கோபமசுத்துக்கு மட்டும் கொறச்சலில்ல... சும்மா சொன்னாக்கூட படக்குன்னு எம்பெரியப்பமுட்டுக் கோபமட்டும் முன்னாடி வந்திரும்.. எம்பெரியப்பன் ஒனக்கு என்னத்தக் கொடுத்துட்டுப் போனாரோ இல்லயோ அவரோட கோவத்த மட்டும் மறக்காம கொடுத்துட்டுப் போயிட்டாரு..." என்றபடி எழுந்து வேட்டிய அவுத்து நல்லாக்கட்டிக்கிட்டு எங்கூட நடந்தான்.

கோவிலுக்குப் பின்னால நிக்கிற வேம்போட சிலுசிலு காத்த அனுபவிச்சிக்கிட்டு, அதோட வேருல ஒக்காந்தோம். அவந்தான் பேச்ச ஆரம்பிச்சான்.

"நேத்துச் சாந்தரம் தேவட்டைக்குப் போனேனுல்ல... அப்ப நம்ம சுப்பிரமணி அயிரப் பாத்தேன்... அதான்ப்பா நம்ம கூத்தாடிச்சி அம்மங்கோவிலு பூசாரி செல்லய்யிரோட மவே... அட மூத்தவன்... கண்டேவி கோவிலு பாக்குறானுல்ல... அட நம்மூட படிச்சானுல்ல...  அவங்கூட பேசிக்கின்னு நிக்கிம்போது பேச்சு வாக்குல அவந்தே அவோ புள்ளயாருபட்டியில இருக்கதாச் சொன்னான்..."

"ஆமா... அவனுக்கு அப்பமே அவ மேல ஒரு கண்ணு... இப்பவும் பேச்சுவாத்தயில இருக்காவலோ என்னவோ..."

"சொந்தக்காரவுகளுக்குள்ள பேச்சுவாத்த இருக்காதா பின்ன... குடியானவன் கண்ணு வக்கிறப்போ... ஒரே சாதிக்காரன்... அதுவும் சொந்தக்காரன்... அவனுக்கு அவோ மொறப்பொண்ணு வேற.... அவனுக்கு ஆசயிருந்துச்சி... அவதான் அவனக் கட்டிக்க மாட்டேனுட்டா... அவோ மனசுல அன்னக்கி வேறயில்ல இருந்துச்சு... " என என்னய ஒரப்பார்வை பார்த்துச் சிரித்தான்.

"நீ கிண்டல் பண்ணுனது போதும்...  புள்ளயாருபட்டியில ஆரு வீட்ல இருக்காளாம்..?"

"அவளுக்கு ஒரு பொம்பளப் புள்ளதானாம்... அவ வீட்டுக்காரரு ரிட்டையரு ஆயிட்டாராம்... மாப்ள புள்ளயாருபட்டி கோவில்ல பெரிய பொறுப்புல இருக்காராம்... அதான் இங்கிட்டு வந்துட்டாக.... காரக்குடிப்பக்கம் வூடு பாக்குறாவளாம்... அவோ மாப்ள இனி எதுக்கு தனியா வூடு புடிச்சி இருந்துக்கிட்டு எங்க கூடவே இருந்திருங்கன்னு  சொல்றாராம்... அவரோட அப்பாரு பரலோகம் பொயிட்டாராம்... ஆத்தாக்காரி மட்டுந்தானாம்... எல்லாருமா இருக்கலாமுன்னு அவருக்கு ஆசயாம்... என்னயிருந்தாலும் மக வீடுதானே... அதனால அவளுக்கு தனியா இருக்கதுதான் நல்லதுன்னு தோணுதாம்... சுப்பிரமணி பாக்கப் போனப்ப அவனுக்கிட்ட சொன்னாளாம்." என்றான்.

"எனக்கு அவோ வெலாசம் வேணு... இல்லேன்னா அவ மாப்ள பேர மட்டுமாச்சும் கேட்டுச் சொல்லு... நா போயி வெசாரிச்சி பாத்திட்டு வாறேன்"

"ஒனக்கு என்ன மசுத்துக்கு இப்ப அவோ வெலாசம்... அன்னக்கி முடிவெடுக்க முடியாதவனுக்கு இப்ப எதுக்கு அவோ வூடு தேடிப்போ வேண்டியிருக்கு... அதெல்லாம் ஒரு மசுரும் வேணாம்... ஒங்கிட்ட வந்து சொன்னது என்னோட பெசவு... காலயிலருந்து காத்திய மாசத்து நாயி மாரிக்கி திரியிறே போல... இதெல்லாம் வாணாம்... சொல்லிட்டேன்... வீணாவுல பெரச்சன வரும்..."

"நாம்பாட்டுக்க செவனேன்னுதானே இருந்தே... என்ன மசுத்துக்கு அவோளப் பத்தி சொல்ல வந்தே...ஏத்திவுட்டுட்டு இப்ப பெரச்சன வரும்... மசுரு வருமுன்னு சொல்ற... இந்த வயசுல என்ன பெரச்சன நக்கிக்கிட்டு வரப்போவுது... இப்ப அவள கூட்டிக்கிட்டு ஓடப்போறேனாக்கும்... முடிஞ்சா சொல்லு... இல்லன்னா விடு... நா எப்புடியாச்சும் வெலாசத்த வாங்கி அவளப் பாத்துக்கிறே..." என்று கோபமாகவும் சத்தமாகவும் பேசினேன்.

"ஏய் இருப்பே... எதுக்குக் கத்துற... ஆருக்காச்சும் வெவரந் தெரிஞ்சி அத்தாச்சிக்கிட்ட சொன்னா அம்புட்டுத்தான்... அதச் தெரிஞ்சிக்க மொதல்ல... இனி அவளப் பாக்கிறதால என்ன பெரோசனங்கிறே... செரி விடு... ஒனக்கு வெலசாந்தானே வேணும்.... நாளக்கி கேட்டுச் சொல்லுறே.... எனக்கென்ன வந்துச்சி... வேலியில போற ஓணானை வேட்டிக்கிள்ள பிடிச்சி விட்டுக்கிட்டு குத்துதே கொடையுதேன்னு சொன்னா... இந்த வாயி மசுத்தாலதான் பெரச்சன வருதுன்னு எம்பொண்டாட்டி திட்டுறதுலயிம் குத்தமில்ல... என்ன சொன்னே... இழுத்துக்கிட்டு ஒடுறியா.... பொட்டச்சி தகிரியமா சொன்னப்பவே ஒன்னால இழுத்துக்கிட்டு ஓட முடியல... இப்ப இழுத்துக்கிட்டு ஓடிட்டாலும்... பொளந்து போயிரும்..."

"இங்கரு செலுவம்...அவளப் பாக்கணுமின்னு தோணுது.... முடிஞ்சா வாங்கிக் கொடு... நீயும் கூட எங்கூட வா.. அவளப் பாத்துட்டு அடுத்த காருக்குத் திரும்பிடுவோம்..."

"இங்கேருப்பா... ஒனக்கு வெலாசம் வாங்கித்தாரேன்... என்ன ஆள விடு... அன்னக்கி ஒங்களுக்கு காவக்காத்த மாரி இன்னக்கிம் காவக் காக்கணுமாக்கும்... ஒன்னு மட்டுஞ் சொல்றேங் கேட்டுக்க... போனமா பாத்தமா வந்தமான்னு இரு... அப்பொறம் அடிக்கடி தொடராத... அவோ இப்ப மாப்ள வீட்டுல இருக்கா... நீ யாரு... எதுக்கு அடிக்கடி வாரேன்னு  தேவயில்லாத பெரச்சன வரும்... பாத்துக்க... அம்புட்டுத்தான் நாஞ்சொல்லுவேன்."

"செரி... செரி...எங்களுக்குத் தெரியும்... புத்தி மசுரெல்லாம் சொல்லவேண்டாம்... உங்க வேலப்பு***** பாருங்க" என்றேன் கடுப்பாய்.

"ஏ வேலப்பு***** பாத்திருந்தா இப்ப என்ன மசுத்துக்கு உங்கிட்ட பேச்சு வாங்கிக்கிட்டு இருக்கேன்.." எனச் செலுவம் எழ, நானும் எழுந்து துண்ட ஒதறினேன்.

'செலுவம் வெலாசம் வாங்கிக் கொடுக்க, இந்தா தேவட்டயிலருந்து காரு ஏறியாச்சு... அவோ மாமாவூட்டு நல்லது கெட்டதுக்கு அப்பாதான் சமயல்... அவோ மாமா சீனிவாசய்யர் அப்பவ மாப்ளயின்னுதான் சொல்லுவாரு... அப்பாக்கு எரனியா ஆப்ரேசன் பண்ணியிருந்தப்ப அவரால போமுடியாம என்னய போச் சொன்னாரு... அன்னக்கி சீனிவாசய்யரோட பேத்தியான அவள பாவாட தாவணியில பாத்தேன்... என்ன அழகு... சொக்கிப் பொயிட்டேன்... அப்பொறம் அவளுக்காவே அடிக்கடி அங்க போனேன். போறப்பல்லாம் பாத்து... பேசி.. எங்களுக்குள்ள நெருக்கமாயிருச்சி... அவோ காலேசு படிச்சாதால அடிக்கடி அவளச் சந்திக்கிறது வெளிய தெரியாம இருந்திச்சி... அப்பல்லாம். எங்களுக்குத் தொண செல்வந்தே... எப்படியோ வெசயம் அப்பா காதுக்கு வர, அந்தவூடு எனக்கு எம்புட்டோ செஞ்சிருக்கு.. உண்ட வூட்டுக்கு ரெண்டகம் பண்ணினா உருப்பட முடியாது தெரிஞ்சிக்க.. ஐயரு வூட்டுப் புள்ளய குடியானவன் கூட்டிக்கிட்டு வரமுடியுமா... சமக்கப் போடான்னு சொன்னா சமஞ்சபுள்ளய பாத்துக்கிட்டு இருக்கியாம்..? சீனிவாசய்யருக்குத் தெரிஞ்சா என்னாகுந் தெரியுமா...? நீ இங்கன இருக்க வேண்டா... ஒம்மாமே ஆந்திராவுல இருக்கான்...அவனுக்கு கடுதாசி போடுறே... அவனுக்கிட்ட போயிடு...' அப்படின்னு கத்தி அனுப்பி வச்சிட்டாரு. '

'வீட்டுக்குத் தெரியாம கடுதாசி போட்டுப்போம்... ஊருக்கு வந்தா அவளத்தேடிப் போயி பாப்பேன். அவளோட படிப்பு முடிஞ்சி கலியாணமும் முடிவு பண்ணிட்டாங்க... என்னால் ஒண்ணுஞ் செய்ய முடியல... நாம ஓடிப்போயிடலாமுன்னு அவ கடுதாசி போட்டா... எனக்குப் பின்னால வெளஞ்சி நின்ன தங்கச்சியளோட வாழ்க்க பெரிசாத் தெரிய என்ன சொல்றதுன்னு தெரியாம வீட்டுல பாக்குற மாப்ளய கட்டிக்க அதுதான் ஒனக்கு நல்லதுன்னு கடுதாசி போட்டுட்டு மனச தேத்திக்கிட்டு ஒதுங்கிட்டேன்... செலுவந்தான் அவ கலியாணத்துக்குப் பொயிட்டு வந்து ஒன்னயத்தான் ரொம்பக் கேட்டா... கலியாணத்துக்காச்சிம் வந்திருக்கலாமுல்லன்னு சொன்னான்னு கடுதாசி போட்டிருந்தான். அதுக்கு அப்பொறம் ஊருக்குப் போவே பிடிக்கல... காலம் எல்லாத்தையும் மாத்தி, தங்கச்சிக கலியாண முடிச்சி... மாமா மவளயே கட்டிக்கிட்டு, ஆந்திரா போவாம மறுபடியும் அப்பாவோட சமயல்ல எறங்கிட்டேன்... '

'ம்... அந்தா இந்தான்னு முப்பது வருசத்துக்கு மேல ஆச்சி... எனக்குள்ள அவோ இருக்கமாரி அவளோட நெனவுல நானிருப்பேனான்னு தெரியல... இத்தன வருசத்துக்கு அப்புறம் இந்த வயசுல அவளத் தேடிப் போறது சரியான்னும் தெரியல... அன்னக்கி அவ சொன்னமாரிக்கி கூட்டிக்கிட்டு ஓடியிருந்தா எங்க வாழ்க்க மாறியிருந்திருக்கும்... அம்புட்டுத் தப்பும் எம்பக்கந்தானே... பொட்டச்சி தகிரியமா ஓடிப்போவோமுன்னு சொன்னப்ப நாந்தானே பொட்டச்சியாட்டம் வீட்டுல பாக்குற மாப்ளய கட்டிக்கன்னு சொன்னேன். அவள விரும்பும் போது தங்கச்சிக வெளஞ்சி நின்னது எனக்குத் தெரியல...  அவளோட மனசுல ஆசய வளத்திட்டு அவோ கட்டிக்கடான்னு சொன்னப்பத்தானே தங்கச்சிக தெரிஞ்சாக.  ஐயரு குடியானவன் சூத்திரமெல்லாம் அப்பா சொன்னப்பல்லாம் எனக்குத் தெரியல... முடியாதுன்னு தெரிஞ்சப்பத்தான் எல்லாம் தெரிஞ்சது... இப்ப என்ன அவசியம் வந்திச்சி அவளப் போயி பாக்கணுமின்னு... எப்பவோ செத்துப்போன நேசத்தை இப்ப தூசி தட்டி என்னாகப்போவுது..? இனி அவளப் போயி பாத்து பழங்கதய ஞாபகப்படுத்துறதுல என்ன வந்துரப்போவுது..? இதால ஆருக்கு என்ன லாபமுன்னு யோசிச்சேன்'.

தேவட்டய நோக்கி காருல திரும்பி வந்துக்கிட்டிருந்தேன். டிக்கெட் வாங்கி பாக்கெட்ல வச்சிக்கிட்டு அவோ வெலசமெழுதியிருந்த பேப்பரக் கிழிச்சி சன்ன வழியா வீசினேன். 

அது காற்றில் பறந்து சென்றது.
******
பிரதிலிபி 'அன்பென்று கொட்டு முரசே!' சிறுகதைப் போட்டிக் களத்தில் நான் எழுதிய சற்றே வித்தியாசமான காதல் கதை என்று நான் நினைக்கும் (!) 'இன்னாருக்கு இன்னாரென்று...' என்ற கதையும் இருக்கு. 

முடிந்தால் வாசியுங்கள்... வாசித்தால் தவறாமல் கருத்துச் சொல்லுங்க... கருத்துச் சொல்லும் முன்னே மறக்காமல் மதிப்பெண் கொடுங்கள்.

கதை குறித்து சில கருத்துக்கள் வந்திருக்கின்றன. அதில் திரு. முஹமது சர்பான் அவர்கள் எழுதிய கருத்து உங்கள் பார்வைக்கு... (எப்படியும் உங்களை வாசிக்க வைக்கும் முயற்சியில்..ஹி..ஹி..)

'எளிமையாக வாழ்க்கையின் திருப்பங்களை உணர்வுகளில் ஆணி அடித்தாற் போல் வெளிப்படுத்தும் கதையோட்டம் மனம் தொட்டது. உள்ளங்கள் சுமந்த அன்பு பலருக்கு ஒரு சிலுவைக்குள் முடிந்து  போகிறது; சிலருக்கு ஒரு பொம்மை போல்  சுட்டித்தனமாய் ஆயுளை கடத்துகின்றது. நாம் நினைப்பது  ஒன்று நடப்பது வேறு இது தான் வாழ்க்கை. அன்பை சுமக்கும்  உள்ளங்கள் எல்லாம் தூய்மையானவை அது  மரணத்தின் பின் கூட காலாவதியாவதில்லை. இன்னும் எழுதுங்கள்  வாழ்த்துக்கள்'
  
கதைக்குச் செல்ல 'இங்கு' சொடுக்குங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

9 எண்ணங்கள்:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அழகான சொலவடையில் தொய்வு ஏற்படுத்தாக அருமையான சிறுகதை. இதழில் வெளியானமைக்கு வாழ்த்துகள்.

துரை செல்வராஜூ சொன்னது…

நல்வாழ்த்துகள்...

ஸ்ரீராம். சொன்னது…

வழக்கம் போலவே அருமை குமார். எங்கள் தளத்துக்கு உங்களிடமிருந்து அடுத்த கதை எதிர்பார்க்கிறேன் குமார்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
வாழ்த்துகள் நண்பரே

ராஜி சொன்னது…

நல்லா இருக்கு வாழ்த்துகள் சகோ

iramuthusamy@gmail.com சொன்னது…

கதை முழுதும் நிறைந்த செட்டிநாட்டு வட்டார வழக்கு இக்கதைக்குப் பலம் சேர்க்கிறது. நல்ல கதைக் கரு. பிடித்திருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குமார் அசத்திட்டீங்க!! மண்ணின் மொழியுடன் அருமையான கதை!! வாழ்த்துகள் குமார்!!!

கீதா

கோமதி அரசு சொன்னது…

கதை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

சரஸ்வதி ராஜேந்திரன் சொன்னது…

அருமை குமார்