மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

சனி, 12 ஏப்ரல், 2014

தொடர்கதை: கலையாத கனவுகள் - 61

முந்தைய பதிவுகளைப் படிக்க...



61.  அம்மாவிடம் மாற்றமா?

முன்கதைச் சுருக்கம்

கிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவைக் காதலிக்கிறான். சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் தனித்தனியே படிப்பைத் தொடர்கிறார்கள். சேகரின் திருமணத்திற்காக ராம்கி ஊருக்கு வருகிறான். அம்மா அண்ணன் மனைவி செய்ததை எண்ணி வருந்த இருதலைக் கொள்ளியாய் தவிக்கிறான்.

இனி...

சேகரின் திருமணத்துக்கு கண்டிப்பாகப் போக வேண்டுமா என்று கேட்ட அம்மாவிடம் போயே ஆகணும் இங்க காலேசுல படிச்ச பிரண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க அவங்களைப் பார்க்கலாம்ல என்று ஒரு கதையை விட்டு கிளம்பி வந்திருந்த புவனா, வந்ததும் வராததுமாய் ராம்கியைத்தான் தேடினாள். இரண்டு முறை அவளைக் கடந்து போனவன் ரொம்ப பிஸியாக இருந்தான். அவளிடம் இரு என்று சாடை மட்டும் காட்டிச் சென்றான். என்ன இவன் வந்து பேசக்கூட முடியவில்லை... அப்படியென்ன வேலையை இழுத்துப் போட்டுப் பார்க்கிறாரு... என்று கோபம் கோபமாக வந்தது.

'சே... வராமல் இருந்திருக்கலாமோ... ரொம்பத்தான் பிகு பண்ணுறாரு... பேசாம கிளம்பிடலாம்' என்று நினைத்தபடி எழுப்போனபோது அவளருகில் சீதா வந்து அமர்ந்தாள். அவளைப் பார்த்ததும் சிநேகமாகச் சிரித்தாள்.

"நீ புவனாதானே?"

"ஆமா"

"என்ன இன்னும் சாப்பாடெல்லாம் முடியல... கிளம்பப் பாக்குறே...?"

"ம்... வந்து காலையில சாப்பிட்டாச்சு... சேகர் அண்ணனைப் பார்த்து வாழ்த்துச் சொல்லிட்டு வந்தாச்சு... அப்புறம் என்ன"

"தம்பி வந்து பேசலையாக்கும்..."

"தம்பி... யார்...?" தெரியாத மாதிரிக் கேட்டாள்.

"இந்தா... எனக்கு எல்லாந் தெரியும்... சும்மா தெரியாத மாதிரி நடிக்காதே... அவனுக்கு கொஞ்சம் வேல... அதான் அங்கிட்டு இங்கிட்டுமா ஓடிக்கிட்டு இருக்கான்... இரு வருவான்..." என்றாள் சீதா.

"ம்... சரி..." என்றபடி பேசாமல் அமர்ந்தாள்.

"எந்தம்பிக்கு சரியான ஜோடி நீதான்... ரெண்டு பேரும் ரோட்டுல போன ஊருக் கண்ணே பட்டுடும்... ராஜாத்தி.... அம்புட்டு அழகா இருக்கே..." என்று கன்னத்தை கைகளால் தடவி தனது தலையில் அழுத்தி சொடக்கு எடுத்தவள் "பாரு எம்புட்டுத் திட்டி இருக்குன்னு... அம்புட்டுப் பேரும் உன்னயத்தான் பாத்திருப்பாளுவ..." என்று சொன்னாள்.

"அக்கா... என்னைய உங்களுக்கு உண்மைக்குமே பிடிச்சிருக்கா?" கண்கள் விரிய ஆர்வமாய்க் கேட்டாள்.

"ஏஏஏஏன்... உன்னைய புடிக்காம... எந்தம்பிக்கு நீதான் பொண்டாட்டியா வரணும்ம்ம்ம்..." இழுத்துப் பேசினாள்.

"ரொம்ப சந்தோஷமா இருக்குக்கா... தேங்க்ஸ்..."

"இதுக்கு எதுக்கு டேங்க்ஸ் எல்லாம் சொல்லுறே... எந்தம்பி பொண்டாட்டி நீயிதான்..." என்றவள் அவர்களைக் கடந்து சென்ற ராம்கியைப் பார்த்து "டேய் இங்க வாடா" என்று அழைத்தாள்.

'ஆஹா... அக்கா எதுக்கு புவி பக்கத்துல இருக்கு... புவியப் பத்தித் தெரிஞ்சாலும் எதாவது ஏழரையைக் கூட்டிட்டா என்ன பண்றது...' என்று நினைத்தபடி அருகே வந்தவன், புவனாவை பார்க்காத மாதிரி "என்னக்கா?" என்றான்.

"ஏன்டா... அவ எம்புட்டு நேரமாத் தேடுறா... எதுக்குத் தவிக்க விடுறே... வேல இருக்கத்தான் செய்யும்.... அவகிட்ட அன்பா நாலு வார்த்தை பேசிட்டுப் போடா..."

"அக்கா... நீ... நீயா சொல்றே... உண்மையாவா?"

"இங்க பாரு... என்னோட வாழ்க்கை இன்னைக்கு நல்லா இருக்குன்னா அதுக்கு யார் காரணம்ன்னு தெரியும்... உங்க மச்சான் இன்னைக்கு ஒரு மனுசனா திருந்தி வாழ்றார்ன்னா நீயும் என்னோட மத்த தம்பிகளும் செஞ்சதுதான்... உன்னோட ஆசை, கனவெல்லாம் இவதான்னு எனக்குத் தெரியும்... எங்கிட்ட எத்தனை தடவை புவி அப்படி... இப்படின்னு சொல்லியிருப்பே... போட்டாவைக் காட்டி என்னோட புவி... என்னோட புவியின்னு எம்புட்டுத்தடவை எங்கிட்ட சொல்லியிருப்பே... எத்தனை எதிர்ப்பு வந்தாலும் நா கட்டி வக்கிறேன்டா..." என்றதும் "அக்கா..." என்று கண்கலங்க அவளது கைகளாய்ப் பிடித்துக் கொண்டான்.

"அக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா... எனக்கு இப்போ தைரியம் வந்தது மாதிரி இருக்கு..." என்று புவனாவும் கையைப் பிடிக்க "இங்கரு... நீ இருக்கேன்னு அக்கா போடுறான்... இல்லேன்னா சீதான்னுதான் சொல்லுவான் களவாணிப்பய..." என்று அவர்கள் இருவரின் இறுக்கத்தையும் மாற்றினாள்.

"ஆமா உங்கள ஒக்கா போடுறாக ஒக்கா... என்னலேன்னு கூப்பிட்டாத்தான் நம்மளோட நெருக்கம் அப்படியே இருக்கும்... புவி...ப்ளீஸ் கொஞ்ச நேரம் அக்கா கூட இரு... வர்றேன்... மதியம் சாப்பிட்டுப் போகலாம்... உங்கிட்ட பேசணும்... ஓகே... " என்றவன் அக்கா கவனிக்காத போது 'ப்ளீஸ் டியர்..." என்று கண்ணடித்தான்.

"ம்... சீக்கிரம் வாங்க..." என்று புவனா சொன்னதும் அங்கிருந்து அகன்றான்.

"ரொம்ப நல்ல பய... யாருக்கு உதவினாலும் ஓடி ஓடி செய்வான்... ஊருக்குள்ள இவன்னாலே எல்லாருக்கும் புடிக்கும்... இந்தா சேகருப்பயல கட்டியிருக்காளே காவேரி அவ எதாயிருந்தாலும் இவங்கிட்டதான் சொல்லுவா... ரொம்ப நல்லபுள்ள... சேகர் கொடுத்து வச்சவன்..."

"ம்..."

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, "இங்க என்னடி பண்ணுறே...?" என்றபடி வந்தாள் நாகம்மா.

"சும்மாதான் உக்காந்திருக்கேன்.. " 

"சும்மா உக்காந்திருக்கியா? " என்றபடி புவனாவைப் பார்த்தாள். "வணக்கம் அம்மா" என்று சொன்னபடி புவனா சிநேகமாய் அவளைப் பார்த்தாள்.

படக்கென்று மறுபக்கம் திரும்பியபடி " என்ன சம்பந்தம் பேசுறியளோ..? இவகிட்ட என்ன பேசிக்கிட்டு இருக்கே... எப்படியாச்சும் அவனைப் பாக்கிறதுக்காக மினுக்கிக்கிட்டு வந்துடுறா?" என்று கடுப்பாகச் சொன்னாள்.

"அம்மா... இது கலியாணக்கார வீடு... தேவையில்லாம பேசாதீங்க... சேகர் கூப்பிட்டிருக்கான்.. இவ வந்திருக்கா... சும்மா போங்க..." என்று சீதை சீற, புவனாவுக்கு அழுகை வந்தது.

"அக்கா நான் கிளம்புறேன்..." என்றபடி எழுந்தவளை "நீ இரு" என்று இழுத்து அமர வைத்தவள், "அம்மா இவளைவிட நல்ல பொண்ணா அவனுக்குப் பாத்துருவீங்களா? இந்தா அண்ணனுக்குப் பாத்து வச்சீங்களே என்னாச்சு... வந்தனைக்கே உங்கள தூக்கிப் போட்டுட்டு புருஷனைக் கூட்டிக்கிட்டுப் பொயிட்டா... ஏன் எனக்குப் பாத்தீங்களே... அண்ணன் சொந்தம் விட்டுப் போகக்கூடாதுன்னு... என்னாச்சு... எம்புட்டு அடி ஒதை பட்டிருக்கேன் தெரியுமா? இன்னைக்கு நான் சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு நீனோ மாமாவோ காரணமில்லை... எந்தம்பிதான் காரணம்... அவனுக்கு இவதாம்மா பொருத்தமானவ... அவங்க வாழ்க்கையும் சந்தோஷமா இருக்கும்... புரிஞ்சிக்கங்க... யாரும் ஒத்துக்கலைன்னா நா நின்னு பண்ணி வைப்பேன்... ஆமா சொல்லிப்புட்டேன்..." என்று சீதா படபடவென பேசினாள்.

"அ... அக்கா... எல்லாரும் பாக்குறாங்க... வேணாம் விடுங்க.." அவளை அடக்கினாள் புவனா.

"பாத்தா என்ன... இது என்ன தப்புங்கிறேன்... பாத்துட்டுப் போறாங்க..." என்றதும் நாகம்மா சூழல் கருதி அங்கிருந்து ஒண்ணும் பேசாமல் நகர்ந்தாள். அவளுக்குள் 'நான் இன்னைக்குச் சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு நீனோ மாமவோ காரணமில்லை... எந்தம்பிதான் காரணம்' என்ற வார்த்தை ஆழமாகத் தைக்க தனியாகப் போய் அமர்ந்தாள்.. 

"என்னடி உம்மவ அந்த மேலாமினுக்கிக்கு இம்புட்டு சப்போர்ட் பண்ணுறா?" என்றபடி அவளருகில் வந்து அமர்ந்தாள் முத்து.

"அதை விடுக்கா?"

"என்னத்தை விடச் சொல்றே...? தூரத்துச் சொந்தம் எனக்கு ஒத்தாசையா இருப்பான்னு கட்டிக்கிட்டு வந்தியே என்னாச்சு... இந்தா காலையில மினுக்கிக்கிட்டு ஆட்டோவுல வந்தா... இருந்தா... சாப்பிட்டா... பொயிட்டா.. அவளே அப்படின்னா... வேற சாதிக்காரிய கட்டிக் கூட்டியாந்து நாளைக்கு நம்ம சாதி சனத்துக்குள்ள ஒண்ணா மண்ணா பொழங்க முடியுமா என்ன... அதைவிட அவளே கஞ்சி ஊத்தாத போது இவ உனக்கு கஞ்சி ஊத்துவான்னு என்ன நிச்சயம்?" முத்து நறுக்கென்று பத்த வைத்தாள்.

"அட நீ வேற சும்மா ஏங்க்கா ஏத்திவிடுறே...? என்ன நடக்கணுமின்னு இருக்கோ அதுதானே நடக்கும்... இந்தப் பய அவுக அக்கா வாழ்க்கை இப்படியிருக்கேன்னு என்னமோ பண்ணி அவ வீட்டுக்காரரை சரி பண்ணியிருக்கான்... இந்தாப் பாரு... எந்தம்பி எனக்கு வாழ்க்கை அமைச்சிக் கொடுத்தான்... அவன் இவளைக் கட்டுனா என்னன்னு கேக்கிறா... இந்தப்பய அவுக அப்பன் மாதிரி அடுத்தவுகளுக்கு ஒண்ணுன்னா பாத்துக்கிட்டு இருக்கமாட்டான்..."

"நான் எதார்த்தத்தைச் சொன்னா நீ எதை எதையோ பேசுறே?" - முத்து.

"அக்கா... அவனுக்கு என்ன நடக்கணுமின்னு இருக்கோ அது நடக்கட்டும்... என்னோட தலையில எழுதுன எழுத்தை இனியா மாத்தமுடியும்.. விடுங்க அக்கா.... கலியாணக்கார வீட்டுல நம்ம குடும்ப பிரச்சினை எதுக்கு... இன்னைக்கு சேர்ற புள்ளைங்க நல்லா இருக்கட்டும்... இங்க உக்காந்து கண்ணக் கசக்குறது நல்லாவா இருக்கு... எதார்த்தம் எல்லாம் பேசிக்கிட்டு காரியம் இல்ல..." என்றதும் முத்து "ம்க்கும்... மவனுக்கு சப்போட்டா பேசுறே... என்னமோ போ" என்று கிளம்பிவிட்டாள்.

அவள் போனதும் சீதாவும் புவனாவும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். 

"அம்மா..." என்று ராம்கியின் குரல் கேட்டு படக்கென்று திரும்பினாள்.

"என்னப்பா?"

"என்னம்மா என்னாச்சு... ஏன் ஒரு மாதிரி இருக்கே?"

"ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்ல..."

"சரி வாம்மா.... சேகர் மச்சானுக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன் கொடுத்துட்டு வரலாம்..." என்று அழைக்கவும் பேசாமல் எழுந்தாள்.

அவனுடன் நடந்தபடி "தம்பி அக்காவையும் கூப்பிடு" என்றாள்.

சீதா இருந்த பக்கம் பார்க்க புவனாவும் அவளும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இப்போ அக்காவைக் கூப்பிட்டா புவி வருத்தப்படுவா.... புவியக் கூப்பிட்டா அம்மா பத்ரகாளியாயிடுவா... என்ன செய்வது என்ற யோசனையோடு "அக்கா அந்தப் பொண்ணுக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கு.... நாம மட்டும் கொடுத்துட்டு வரலாம்... வாம்மா" என்று அவளது கையைப் பிடித்து இழுத்தான்.

"அப்ப அந்தப் புள்ளையையும் சேத்துக் கூப்பிடு..." என்ற நாகம்மாவை நம்பாமல் பார்த்தான் ராம்கி.

(புதன்கிழமை தொடரும்)
-'பரிவை' சே.குமார்.

2 எண்ணங்கள்:

Unknown சொன்னது…

ஆஹா...........ஆத்தாவும்,மகளும் சேந்துக்கிட்டு நிறைவேத்தி வச்சுடுவாங்க போலயே!குட்......நல்லதே நடக்கும்!

Menaga Sathia சொன்னது…

சூப்பர்ர்ர்,படிக்கும்போதே நெகிழ்ச்சியா இருக்கு!!