மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 13 டிசம்பர், 2013

மயிலைக்காளைகளும் மச்சக்காளையும்


மாடு ரெண்டும் மயிலைக்காளை
அதை ஓட்டுறது மச்சக்காளை...
பாய்ந்தோடும் காளைகளுக்கு
பழக்கமான சாலை இது...
பள்ளம் மேடு நெளிவு சுளிவு
நல்லாத் தெரிஞ்சு...
நளினமாக கடந்து போகும்...
வண்டி போகும் தாலாட்டில்
வலிய வரும் தூக்கத்துக்கு
மச்சகாளை மயங்கினாலும்
காளைகள் தடம் மாறாது...

இது பஸ்சுக்காரு பைக்குவண்டி
பரபரக்கும் சாலையில்லை....
எப்போதே எதிரே வரும் 
சைக்கிளுக்கு எப்போது 
விலகுவதில்லை காளைகள்...
எப்பவுமே ஒரம்போவது
சைக்கிள் ஓட்டிகள்தான்...
மச்சக்காளையின் குறட்டை கண்டு
நடப்பவரும் சிரிப்பதுண்டு...
சரியான பயணமே என்றாலும்
பள்ளத்தில் இறங்கியேறும் போது
தூக்கத்திலும் குறட்டைக்குப்
பதிலாக 'ஏய்... ஏய்...' என்பான்...

ஜல்ஜல் பயணம் சட்டென நிற்க
மனைவியின் குரலுக்கும்
மணியின் ஓசை அடங்கலுக்கும்
அதிர்ந்து இறங்கும் மச்சக்காளை
மீண்டும் போவான் தூக்கத்துக்கு...
மயிலைக்காளைகளுக்கோ
மச்சக்காளையின் மகனின்
தோளில் சுமந்த கலப்பை
தயாராய் இருக்கும்...


இது எப்போதும் தொடர்வதுதான்...
ஆனால் இப்போதுதான்
மயிலைக்காளைகளும் இல்லை...
மாட்டுவண்டிகளும் இல்லை...
கட்டுத்துரைகளும் இல்லை...
கலப்பைகளும் இல்லை...
இவற்றிற்கெல்லாம் மேலாக
மச்சக்காளையும் இல்லை...
-'பரிவை' சே.குமார்.

15 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

"சாட்டைக் கையில் கொண்டு வாங்கக் கண்டு காளை ரெண்டு... ஓடுது பாரு... தாவுது பாரு...சீறுது பாரு... பறக்குது பாரு..." இப்படி ஒரு சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல் இருக்கிறதே, கேட்டிருக்கிறீர்களா குமார்?

Menaga Sathia சொன்னது…

அழகான கவிதை,படிக்கும் போதே நினைவுகள் கண்முன்னே வருகிறது..

அம்பாளடியாள் சொன்னது…

யெதார்த்தமான உண்மைகளை மிகச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளீர்கள் .
மேலும் தொடர வாழ்த்துக்கள்
சகோதரா .

துரை செல்வராஜூ சொன்னது…

இப்போது
மயிலைக் காளைகளும் இல்லை..
மாட்டு வண்டிகளும் இல்லை..
எல்லாவற்றிற்கும் மேலாக
மச்சக்காளையும் இல்லை!..

காலத்தின் கோலம் இப்படியாகி விட்டது!..

Unknown சொன்னது…

நவீன மயத்தால் காணாமல் போனவைகளை நினைப்பதும் சுகம் !
த.ம +1

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மச்சக்காளையும் மயிலக்காளையும் கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள் குமார்.

பாராட்டுகள்.

vimalanperali சொன்னது…

உழைப்பாளிகள் மட்டுமே இன்னும் மிச்சமிருகிறார்கள்.மயிலைக்காளைகளும்கூட ஆங்காங்க்கே காணக் கிடைக்கிறது தான். என்ன இந்த பொருளாதார மாயை சூழ் உலகில் பனம் பண்ணுவது மட்டுமே முக்கியம் என்கிற எண்ணம் மேலோங்குகையில் இது மாதிரியானவைகள் காணாமல் ஆக்கப்படுகின்றன/

அ.பாண்டியன் சொன்னது…

சகோதரருக்கு வணக்கம்
உண்மையைக் கவியாய் தந்த விதம் கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள். அருமையான கவிதைக்கு நன்றிகள்.
===
எனது தளத்தில்---- படித்தவர்கள் தான் தவறு செய்கிறார்களா?
http://pandianpandi.blogspot.com/2013/12/blog-post_13.html

Unknown சொன்னது…

ஹூம்.............என்ன செய்ய?உங்கள் போன்றவர்கள் கவிதையில்/கதையில் அந்தக் காலத்தை நினைவூட்டினால் தான் உண்டு!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே அருமை
த.ம.6

ஜீவன் சுப்பு சொன்னது…

ரெம்ப நல்லாருக்கு :)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கவிதை அருமை... முதல் படமும் சூப்பர்...!

வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

ஆனால் இப்போதுதான்
மயிலைக்காளைகளும் இல்லை...
மாட்டுவண்டிகளும் இல்லை...
கட்டுத்துரைகளும் இல்லை...
கலப்பைகளும் இல்லை...
இவற்றிற்கெல்லாம் மேலாக
மச்சக்காளையும் இல்லை...
-'
தற்போது கிராமங்களின் உண்மை நிலை இதுதான்!குமார்!

வெற்றிவேல் சொன்னது…

மயிலைக் காளைக் கவிதை அருமை...

படமும் கவிதையும் சிறப்பு... பாராட்டுகள்

ராமலக்ஷ்மி சொன்னது…

/மயிலைக்காளைகளும் இல்லை...
மாட்டுவண்டிகளும் இல்லை.../

உண்மைதான். காண அரிதாகி விட்டன இக்காட்சிகள். நல்ல கவிதை.