மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

திங்கள், 25 மார்ச், 2013

திமுக செயற்குழு - அழகிரி, நெப்போலியன் ஆப்சென்ட்! குஷ்பு ஆஜர்!!



காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிலிருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் வெளியேறிய நிலையில் திமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

 ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவையும் காங்கிரசுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டது திமுக. இதைத் தொடர்ந்து விரைவில் வர இருக்கும் லோக்சபா தேர்தலுக்கான வியூகம் வகுக்கவும் ஈழத் தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் தற்போது அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.

 இக்கூட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்து வருகிறார். இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்களான மு.க. அழகிரி, நெப்போலியன் இருவரும் பங்கேற்கவில்லை. 

மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற்ற பின்னர் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை தனியே சந்தித்து ரகசியம் பேசியவர்கள் அழகிரியும் நெப்போலியனும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திமுகவில் நீடிப்பாரா? இல்லையா? என்ற கேள்விகளை எழுப்பி வைத்த நடிகை குஷ்புவும் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.



உடம்பு சரியில்லை, ரெஸ்ட் எடுக்க மதுரைக்கு வந்துட்டேன்: முக அழகிரி

தனக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் மதுரையில் ஓய்வெடுக்க வந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். 

திமுக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் வெளியேறியது. இதையடுத்து திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். 

இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் துவங்கி நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களாக சென்னையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி செயற்குழு கூட்டம் நடக்கும் இன்று காலை மதுரைக்கு வந்துவிட்டார். 

மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் திமுக செயற்குழு கூட்டத்தை புறக்கணித்துவிட்டு மதுரைக்கு வந்துவிட்டீர்களே என்று அழகிரியிடம் கேட்டனர். 

அதற்கு அவர் கூறிய பதில், 250க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களில் சிலர் இன்று கூட்டத்திற்கு வராமல் இருப்பார்கள். அதில் நானும் ஒருவர் என்று வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் மதுரையில் உள்ள எனது வீட்டில் ஓய்வெடுக்க வந்திருக்கிறேன். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் டெல்லியில் எனக்கு அலுவலகம் இல்லை. அலுவலகம் இல்லாததால் மதுரைக்கு வந்தேன் என்றார். 



ப.சிதம்பரம், வாசன் ஆகியோரை தனியாக சந்தித்ததாக செய்திகள் வந்ததே என்று கேட்டதற்கு, அவர்களை மட்டும் தானா சந்தித்தேன். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட பலரையும் சந்தித்தேன் என்றார்.

நன்றி : தமிழ் இணையப் பக்கங்கள் 
-'பரிவை' சே.குமார்

1 எண்ணங்கள்:

Yoga.S. சொன்னது…

அதானே,இறக்கையில் ஒரு சிறகு மட்டும் ஒடிந்தால் என்ன,பறக்க முடியாதா????ஹி!ஹி!ஹீ!!!!