மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 22 ஜூலை, 2016

எங்கூரைப் போல வருமா? (அகல் ஜூலை -15 கட்டுரை)

Picture
(மாரியம்மன் கோவில் - கும்பாபிஷேகத்திற்கு முன் எடுத்த போட்டோ)
வ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு இடத்துத் தண்ணீர் குடித்து வளர்ந்தாலும் முதன்முதலில் குடித்த நம்ம ஊர்த் தண்ணிக்கு ஈடு இணை எதுவுமில்லை... எப்படிப்பட்ட ஆளாய் இருந்தாலும் சொந்த ஊர் பற்றிப் பேச ஆரம்பித்தால் மனசுக்குள் சந்தோஷமாய் காட்சிகள் விரிய ஆரம்பிக்கும். பிறந்த ஊர் என்பது பெற்ற தாயைப் போல அதன் மீதான பாசம் என்றும் குறையாது. 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா...?' அப்படின்னு நம்ம ராசா ஒரு பாட்டே போட்டு வச்சிருக்காரு... ஒவ்வொருத்தருக்கும் அவங்க பிறந்த ஊர் என்றைக்கும் சொர்க்கம்தான்.

எங்க ஊர்... பெரிய அளவில் சொல்ல ஒண்ணுமில்லைங்க... ஏன்னா சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமம்... சிவகங்கை மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்ததுதான் என்பதால் அந்த வறட்சி எங்க மாவட்டத்திலும் இருக்கத்தானே செய்யும்... வானம் பார்த்த பூமிதான்... பத்து வருசத்துக்கு முன்னால மழை பெஞ்சா விளைந்த ஊர்... இன்று வயல்களின் வரப்புக்கள் தெரியாத வண்ணம் உருமாறிக் கிடக்கிறது. எங்க தலைமுறையில் பெரும்பாலானோர் வேலை நிமித்தமாகவும், பிள்ளைகளின் படிப்பு காரணமாகவும் நகரத்தை நோக்கி நகர, முந்தைய தலைமுறையில் கொஞ்சமும் இன்றைய தலைமுறையில் சிலருமாக தன்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

எங்க ஊருக்கு போகும் வழியில் பாதிவரை தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்டது. மீதிப்பாதி கண்டதேவி பஞ்சாயத்துக்கு உட்பட்டது. கண்டதேவி கேள்விப்பட்டிருப்பீங்களே... பிரசித்திபெற்ற சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில்... ஆனித் தேரோட்டம்... பிரச்சினையால் சில காலமாக தேர் ஓடவில்லை... பத்திரிக்கைகளில் பரபரப்பாய் இருந்த ஊர்தான்... சரி விடுங்க அதை இன்னொருநாள் பேசலாம்... எங்க ஊரில் இருந்து கூப்பிட்டால் கண்டதேவியில் நிற்பவருக்குக் கேட்கும்... அம்புட்டுப் பக்கம்.... சின்ன வயதில் தேரோட்டம் என்பது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய திருவிழா.... ம்... என்ன சொல்ல... ஜாதி அரசியல்... சரி விடுங்க... இதைப் பேசினால் நம்மூரைப் பற்றி பேசாமல் போய்விடுவேன்.

எங்க ஊரைப் பொறுத்தவரை பொங்கல் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா ரொம்ப விஷேசமா இருக்கும். நாங்கள்லாம் பிறக்கும் முன்னர் எங்க ஊர் கருப்பர் கோவிலில் ஏழெட்டு ஊர்ச் சனங்கள் கூடி கிடா வெட்டிப் பூஜை போடுவார்களாம். அரிவாளை தீட்டிக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம். அரிவாள் மீது ஏறி நின்று ஆடுவாராம். கருப்பனசாமி ஆடும் எங்க ஊர்க்காரர் அரிவாளால் கிடாயை ஒரே வெட்டில் வெட்டுவாராம். தலை தனியாக முண்டம் தனியாக விழாமல் தொங்கிக் கொண்டிருந்தால் (தொங்கு கிடாய்) அந்த வருடம் ஊருக்கு நல்லதில்லையாம்... ஏதாவது பிரச்சினைகள் உருவாகும் என்று நம்பிக்கை என அப்பா சொல்லக் கேள்வி, இப்பல்லாம் அவங்க அவங்க ஊரில் தனித்தனியாக கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்... கிடா வெட்டெல்லாம் இல்லை.  சித்ரா பௌர்ணமிக்கு எங்க ஊரில் இருந்து கல்லல் அருகில் இருக்கும் வெற்றியூருக்கு காவடி போகும். எங்க ஊரு கருப்பருக்காகவே அங்கு பூக்குழி வளப்பார்கள், மிகப்பெரிய விஷேசமாக நடக்கும். அதுவும் ஒரு காரணத்தால் நின்று போச்சு. அதன் பிறகு சிலர் முயற்சித்து காவடி எடுக்க அதுவும் சோகத்தில் முடிந்ததால் அதன் பின்னான காலங்களில் காவடி எடுப்பதில்லை.

எங்க ஊருக்கும் கண்டதேவிக்கும் பொதுவாக எங்க கண்மாயின் உள்ளே ஒரு ஐயனார் கோவில் இருக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்... அதற்கு விழா எடுத்து எருது கட்டு எல்லாம் நடத்தியிருக்கிறார்கள். அதுவும் முதல்மரியாதை எங்களுக்குத்தான் வேண்டுமென ஒரு சாரார் கேட்டதால் நின்று விட்டது. இப்போது அம்மன் திருவிழாவிற்கு காப்புக் கட்டும் முன் ஐயனாருக்கு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வருவதுடன் சரி.

ஊருக்குள் நுழையும் முன்னர் கண்மாய் இருக்கிறது. அதில் எங்க ஊர் முனீஸ்வரர் இருக்கிறார். எங்களுக்கு காவல் தெய்வம் அவர்தான்... சைவ முனீஸ்வரர்... புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை ஊரே கூடி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவோம். கண்மாயில் தண்ணீர் நிறைந்து முனியய்யா கல்லைச் சுற்றி விட்டால் அந்த வருடம் நல்ல விளைச்சல் வரும்.  எங்க ஊருக்கு ரோடு போடும் முன்னர் குளக்கால் ஓரமாக நடந்துதான் வரவேண்டுமாம். தேவகோட்டையில் மளிகைக் கடை வைத்திருந்த எங்கப்பா இரவு பத்துப் பதினோரு மணிக்கு வரும் போது கண்டதேவி செல்லும் பாதையில் சைக்கிளில் வந்து பின்னர் குளக்கால் ஓரமாக சைக்கிளை உருட்டியபடி நடக்க ஆரம்பித்தால் அவருக்கு முன்னே வெள்ளையாய் ஒரு உருவம் நடந்து போவது போல் தெரியுமாம்... சரியாக கோவில் வந்ததும் மறைந்துவிடுமாம்... அப்பாவுக்கு முனியய்யா மீது ரொம்பப் பற்றுதல்... இன்றும் எதைச் செய்தாலும் அங்கு போய் நின்று வேண்டி திருவுளம் சொன்னால் சந்தோஷமாய்ச் செய்ய ஆரம்பிப்பார். எனக்கும் அவர் மீது அதீத பற்றுதல் உண்டு.

எங்க ஊர் மாரியம்மன் ரொம்பக் கோவக்காரி... நாங்க படிக்கும் காலத்தில் கோவிலில் ஊர் கூட்டம் நடந்தால் அடிதடி சண்டையில்தான் முடியும். அவள் மாரியல்ல... மாரியானவள், தேவகோட்டை ஸ்தபதி சிங்கப்பூர் காளியம்மன் கோவிலுக்கு செய்து வைத்திருந்த பீடம் மாறி வந்துவிட்டது என்றும்... மாரிக்கான மருந்து சாத்தியதில் அவள் காளியின் குணத்தோடு இருப்பதாகவும் சொல்வார்கள். பின்னர் நான் கல்லூரி படிக்கும் போது... நடந்த கும்பாபிஷேகத்தின் போது கண்டதேவி இராஜ குருக்கள்.. மருந்தின் அளவைக் குறைத்து வைத்து உக்கிரத்தை குறைத்தார். இன்று எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வருடாவருடம் சிறப்பாக திருவிழா நடந்து வருகிறது... ஊரும் நன்றாக இருக்கிறது... இப்போது எங்கள் மாரிக்கு அழகிய கோபுரத்துடன் அற்புதமாக கோவிலைக் கட்டிவிட்டோம். திருவிழா நடக்காமல் பிரச்சினை வரக் காரணம் தெய்வம் மட்டுமல்ல ஊரைக் கெடுக்க நினைக்கும் சில மனிதர்களும்தான்.

எங்க ஊரில் மாட்டுப் பொங்கல் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்... கருப்பர் கோவிலின் முன்பாக ஊரே கூடி பொங்கல் வைத்து... திட்டிக் குழியில் கதப்பச் சோறு வைத்து... 'பட்டி பெருகப் பெருக... பால்பானை பொங்கப் பொங்க' என்று எல்லாரும் சொல்லியபடி திட்டிக்குழி சுற்றி மாடுகளுக்குத் சோறு தீட்டி... சந்தோஷமாய்க் கொண்டாடுவோம்.... ஊரே கூடி நின்று கேலி முறைக்காரர்கள் ஒருவருக்கு ஒருவர் சோறு தீட்டி... அந்தச் சந்தோஷம் இன்றளவும் குறையாமல் வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. நமக்குத்தான் வாழ்க்கையின் ஓட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கையால் கொடுப்பினை இல்லாமல் போச்சு... நம்ம வாரிசு பொங்கல் விழாவில் கலக்கோ கலக்குன்னு கலக்கி 'குமாரு மகனாடா நீயி'ன்னு கேக்க வைச்சிடுறான்.

மாரியம்மன் கோவில் திருவிழா (செவ்வாய்) வைகாசி மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை காப்புக்கட்டி மூன்றாம் செவ்வாய்க்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்படும். ஒரு வாரம் முழுவதும் சாமிக்கு கரகம் எடுத்து இரவு பதினோரு பணிரெண்டு மணி வரை முளக்கொட்டுக் கொட்டி ஊரே கூடி சந்தோஷமாய் களிப்போம். செவ்வாய்க்கிழமை உறவுகளுக்குச் சொல்லி, பால் குடம் எடுத்து... இரவு விருந்து வைத்து... வீட்டுக்கு வீடு வேப்பிலை, தென்னம்பாலை வைத்து கரகம் வைத்து அதை கோவிலுக்கு கொண்டு சென்று  வைப்போம். இரவு கலை நிகழ்ச்சி நடக்கும். மறுநாள் காலை கருப்பரைக் கும்பிட்டு வந்து அம்மன் கோவிலில் இருந்து கரகத்தை எடுத்து மூன்று இடத்தில் வைத்து முளக்கொட்டி கண்மாயில் கொண்டு விட்டு வருவோம். செவ்வாய்க்கு பெரும்பாலும் எல்லாரும் வந்து விடுவார்கள். நானும் மே மாதம் ஊருக்குப் போவதால் இதுவரை செவ்வாய் சந்தோஷத்தை அனுபவிக்கத் தவறியதில்லை.

பள்ளிக்கூடத்தில் படித்த போது மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்குச் செல்வோம்... புத்தகப் பை பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையில் இருக்கும்... மதியச் சாப்பாட்டுக்கு  கொண்டு செல்லும் தட்டு மட்டுமே தலையில் இருக்கும்... அதிக மழை என்றால் ஒதுங்கிய ஆட்டுக்கசாலை இப்போது இல்லை. அங்கும் வீடுகள் வந்தாச்சு... எங்க வீடும் இப்போ அதற்கு எதிரேதான்... செம்மண்ணில் விழுந்து ஓடும் நீரில் விளையாண்டதையும்... ஏத்து மீன் பிடித்ததையும்... மாடு மேய்த்ததையும்... கொட்டாங்கிழங்கு பிடுங்கி அவிச்சு சாப்பிட்டதையும்... செட்டிய வீட்டுத் தோட்டத்தில் இளநீர் பறித்துச் சாப்பிட்டதையும்... கண்மாயில் மணிக்கணக்கில் நீச்சலடித்ததையும்... மாட்டின் வாலைப் பிடித்து நீச்சியதையும்... 'அடேய் பாவிபரப்பானுங்களா'ன்னு மரத்தோட உரிமையாளரான கிழவி கத்த, ரோட்டோர மாமரத்தில் மாங்காய் பறித்ததையும்... சைக்கிள் பழகும் போது கண்மாய் மேட்டில் விழுந்ததையும்... அடுத்த ஊர் கண்மாய்க்குச் செல்லும் குளக்காலில் அடைத்து எங்க கம்மாயை நிரப்ப தண்ணீரைத் திருப்பி விட்டதையும்... தண்ணீர் வெளியாகாமல் சறுக்கையில் மணல் மூட்டைகள் போட்டு அடைத்ததையும்... மடையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசியதையும்... கண்மாய் மடையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்ததையும்... ஆடு, மாடு, கோழி, நாய் வளர்த்ததையும்... கிளி, மைனா வளர்த்ததையும்... நித்தம் நினைவுகளாய்ச் சுமந்து திரிந்தாலும் அந்த நாட்கள் கொடுத்த சந்தோஷத்தை... இதை எல்லாம் எமக்கு அளித்த எங்க ஊரை எப்படி மறக்க முடியும்... திரும்பப் பெற முடியாத வசந்த காலம் அல்லவா அவை.

இந்த முறை இருபது நாட்களுக்கு மேல் எங்க ஊரில்தான் இருந்தேன்... ஊருக்குள் நமக்கான ஒரு வீட்டைக் கட்டி குடிபோய் திருவிழாக் கொண்டாடியதால் அங்குதான் அதிக நாள் தங்கினேன்... அந்த மாசில்லாத காற்றும்... 'குமாரு நல்லாயிருக்கியாப்பா...' என்று கேட்கும் வாஞ்சையான உறவுகளும்... குதூகலித்து ஆட்டம் போட்ட எங்க வீட்டு வாண்டுகளுமாய் எனக்குள் அதிக சந்தோஷத்தை விதைத்தது நான் பிறந்த மண்ணு...

எங்க ஊருக்கு நாங்க படிக்கிற காலத்துல பஞ்சாயத்துல போட்ட சரளை ரோடு பாதிவரைதான்... நகராட்சி ரோடு போடாததால் ஆவாரம் செடிகளுக்கு இடையே ஒத்தையடிப் பாதைதான்... இப்போ நகராட்சியும் பஞ்சாயத்தும் தார்ரோடு போட, எங்க பிரசிடெண்ட் கண்டதேவிக்கும் எங்க ஊருக்கும் ரோடு போட்டுக் கொடுத்து தண்ணீர் தொட்டியையும் ஊருக்குள் கட்டிக் கொடுக்க, வீட்டுக்கு வீடு தண்ணீர் பைப் இழுத்து வைத்துக் கொண்டு வீட்டுத் தோட்டமெல்லாம் போட்டு அழகாக வாழ்கிறார்கள்.

விளைச்சல் காலத்தில் பச்சைப் பசேலென்று இருந்த கிராமம்... சிலுசிலுவென பயிர்களைத் தழுவிச் செல்லும் காற்று... இப்படியாக இருந்து இன்று விவசாயத்தின் விதையை இழந்திருந்தாலும் நகரம் தழுவாத எங்கள் கிராமம் இன்னும் அழகியாய்....

எங்களுக்கு பாசத்தையும் நேசத்தையும் ஊற்றி வளர்த்த கிராமமான 'பரியன் வயல்' எப்போதும் எனக்குள் சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா...? 

அகலில் கட்டுரையை வாசிக்க :  எங்கூரைப் போல வருமா?

அகல் ஜூலை - 15ம் தேதி இதழை வாசிக்க :  அகல் மின்னிதழ்


-'பரிவை' சே.குமார்.

12 எண்ணங்கள்:

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யம்! வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சுவாரஸ்யமான தகவல்கள் உங்கள் ஊரைப் பற்றி உங்கள் அனுபவங்கள் உட்பட....அகலில் தொடர்வதற்கு வாழ்த்துகள் குமார்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் துளசி சார்...
தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி.

சாரதா சமையல் சொன்னது…

உங்களுடைய மலரும் நினைவுகள் பதிவு மிக அருமை குமார். நானும் ரசித்து படித்தேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான நினைவுகள். வாழ்த்துகள் குமார்.

துரை செல்வராஜூ சொன்னது…

உங்கள் ஊரைச் சுற்றி வந்த மாதிரி இருக்கின்றது..

நலம் வாழ்க!..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

பொதுவாக எழுதுவதைவிட ஊரைப்பற்றி எழுதும்போது அதிக செய்திகள் மனதிற்குள் வரும். ஈடுபாடும் அதிகமாகக் காணப்படும். அதனை உங்களது இப்பதிவில் காணமுடிகிறது. அவரவர்கள் தத்தம் ஊரை நினைத்து பெருமைபட்டுக்கொள்ள இப்பதிவு உதவும். வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அம்மா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் ஐயா...
உண்மைதான் அய்யா... இன்னும் நிறைய எழுதலாம்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.