மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

புதன், 30 டிசம்பர், 2015

பசங்க 2 - ஒரு பார்வை

து படத்திற்கான விமர்சனம் அல்ல... ஒரு அழகான, அருமையான... தங்கள் குழந்தைகள் படுத்துகிறார்கள் என்று சொல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் குறித்தான என் எண்ணத்தின் வெளிப்பாடு மட்டுமே என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன்.


இந்தக் கதையை எடுத்து அதை கொஞ்சமும் தொய்வில்லாமல், அறிவுரை சொல்லுகிறேன் பேர்வழி என்று ஆவணப்படம் போல் ஆக்காமல் மிகத் தெளிவாக, அழகாக, ஒரு அருமையான படமாகக் கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கும் தயாரித்த சூர்யா அவர்களுக்கும் முதலில் எனது வாழ்த்துக்கள்.

கவின், நயனா போன்ற குழந்தைகளை இப்போது எல்லாருடைய வீட்டிலும் பார்க்கலாம். கேள்வி மேல் கேள்வி கேட்கும் குழந்தைகள் இப்போ நிறைய இருக்கிறார்கள். இவன் எங்கிட்டே கேள்வியே கேட்டுக் கொல்லுறான் என்று புலம்புவதும் ஒரிடத்தில் நிற்க மாட்டேங்கிறான்... ஆடிக்கிட்டே இருக்கான்... எதையாவது நோண்டிக்கிட்டே இருக்கான் என்று கத்துவதும் இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலோனரின் செயலாகத்தான் இருக்கிறது. ஏன் அப்படிப்பட்ட பெற்றோர்களில் நாமும் ஒருவராகத்தான் இருக்கிறோம் என்று சொல்வதில் தவறொன்றும் இல்லையே.

கவினுக்கு நடனம் பிடிக்கும், நயனாவுக்கோ புனைவுலகில் சஞ்சரித்து கதைகள் சொல்லப் பிடிக்கும்.  இந்த இரண்டு குழந்தைகளுக்கும் கட்டுப்பாடுகள் நிறைந்த பள்ளிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. இவர்கள் இருவரும் பெற்றவர்கள் முதல் பள்ளி ஆசிரியர்கள் வரை கேள்விகளைக் கேட்டு கேட்டு அவர்களை வெறுப்பேற்றுகிறார்கள். மேலும் இவர்களுக்குப் பிடித்ததை மட்டுமே ஈடுபாட்டோடு செய்கிறார்கள். இவர்களால் இவர்கள் பெற்றோர்கள் படும்பாடு சொல்லி மாளாது.

இவர்களின் செயல்களால் ஒவ்வொரு பள்ளியிலும் பிரச்சனையாகி மாற்றுச் சான்றிதழைக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகளில் பெற்றோர் சொல்வது போல் மாற்றுச் சான்றிதழை மட்டும் கொடுக்காமல் அதனோடு சேர்த்து அந்த வியாதி, இந்த வியாதி என வியாதிகளையும் சேர்த்து சொல்லி அனுப்பி விடுகிறார்கள். இந்த நிலையில் ஒருவரும் ஒரே பள்ளியில் சேர்க்கப்பட்டு... ஒரே குடியிருப்பிலும் தங்குகிறார்கள். அங்கு இவர்கள் அடிக்கும் லூட்டியும் பள்ளிக்கூடத்தில் அடிக்கும் லூட்டியும் கலகல.


ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை வைத்து மேய்க்க முடியாமல் ஹாஸ்டலில் கொண்டு போய் விட, குழந்தைகள் இனி தப்புச் செய்ய மாட்டோம் என்று அலறும்போது உண்மையில் வலிக்கிறது. பின்னர் அவர்கள் அங்கிருந்து வந்தார்களா..? திருந்தினார்களா...? அவர்களுக்குப் பிடித்ததை செய்தார்களா...? என்பதை எல்லாம் மிக அழகான திரைக்கதை நகர்த்தலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

சோட்டா பீம் பாடல் குழந்தைகளைக் கவரும்.  இன்றைய பள்ளிக் கல்வி முறை, தனியார் பள்ளிகளின் பணத்தாசை, பெற்றோரின் தனியார் பள்ளி மோகம் என எல்லாவற்றையும் பேசியிருக்கிறது படம். பிள்ளைகளைச் சேர்க்க அப்ளிகேசன் வாங்குவதற்காக காத்திருக்கும் பெற்றோரும், அதில் அரசுப் பள்ளி ஆசிரியர் நிற்பதும் நடைமுறை உண்மை. சென்னையில் இருக்கும் போது டிவிஏ பள்ளியில் அப்ளிகேசன் வாங்க முதல் நாள் மாலையில் இருந்தே வரிசையில் நிற்பார்கள். என் நண்பனும் அவனின் மனைவியும் முதல் நாள் முதல் அடுத்த நாள் வரை வரிசையில் நின்றும் இருவரும் இந்தப் பணி பார்க்க வேண்டும்... இத்தனை கிலோ மீட்டருக்குள் வீடு இருக்க வேண்டும் என்றும் சொல்லி அப்ளிகேசன் கொடுக்கவில்லை. இது நான் கண்ணால் பார்த்த உண்மை. இரவெல்லாம் பணியில் கிடந்து உறங்கி காத்திருந்த பெற்றோரைப் பார்க்கும் போது சிரிப்பைவிட கடுப்பே வந்தது.

சூர்யா... துறுதுறுவென தங்களுக்கென்று ஒரு உலகம் ஏற்படுத்தி அதில் சஞ்சாரித்து சந்தோஷப்படும் குழந்தைகளின் பெற்றோருக்கு அறிவுரை சொல்வதோடு அந்தக் குழந்தைகளுக்கு வித்தியாசமான டிரிட்மெண்ட் கொடுக்கும் மருத்துவராக வருகிறார். அளவான நடிப்பு... அவரின் மனைவியாக வரும் அமலா பால், குழந்தைகளின் மனம் அறிந்த ஆசிரியையாக வருகிறார். அழகாவும் இருக்கிறார்... நல்லாவும் நடித்திருக்கிறார்.

வசனங்கள் எல்லாமே அருமை... இதில் முத்துநிலவன் ஐயாவின் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே என்ற புத்தகத்தின் சில கருத்துக்களையும் ஐயாவின் அனுமதியுடன் இயக்குநர் பயன்படுத்தி இருப்பதாக ஐயா தன்னோட தளத்தில் பசங்க குறித்து எழுதிய பதிவில் எழுதியிருக்கிறார். படத்தின் இசை படத்தோடு ஒன்றிப் போகிறது.


'பசங்க கெட்ட வார்த்தை பேசுவதில்லை... 
கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள்.'

'ஏம்ப்பா... எங்க ஸ்கூலுக்கும் அந்தக் ஸ்கூலுக்கும் என்ன வித்தியாசம்..? 
அங்க படிக்கிறவங்க தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுவாங்க... இங்க படிக்கிறவங்க இங்கிலீஸ்ல கெட்ட வார்த்தை பேசுவாங்க'

'எப்படி மாமா இருக்கு பிரேக் பாஸ்ட்...
இங்க பாரும்மா  சமைச்சிக்கிட்டே இரு... நான் சாப்பிட்டுக்கிட்டே இருக்கேன்... என்னைக்கு நல்லா இருக்கோ அன்னைக்கு சொல்றேன்...
உனக்கு எப்படிடா இருக்கு?
சூப்பர் அம்மா
நீங்க நல்லாயில்லைன்னு சொன்னீங்க அவன் நல்லாயிருக்குங்கிறான்...
டேய்
சும்மா இருங்க டாடி உங்களை முறைக்கிறாங்க... நான் சொன்னா அடிச்சாலும் பரவாயில்லை... கடிக்கிறாங்க...'

'நம்ம காலத்துல ஒயின்ஷாப்பை தனியார் நடத்துனாங்க... 
பள்ளிக்கூடத்தை அரசாங்கம் நடத்துச்சு... 
ஆனா இன்னைக்கு 
ஒயின்ஷாப்பை அரசாங்கம் நடத்துது... 
பள்ளிக்கூடத்தை தனியார் நடத்துறாங்க...'

'நாங்க ஸ்கூலை நம்புறவங்க இல்லை 
பெத்த பிள்ளைங்களை நம்புறவங்க...'

'ஒவ்வொரு ஸ்கூல்லயும் டிசியோட சேர்த்து அவனுக்கு ஒரு நோயையும் கொடுத்து விடுறாங்க... போதும் மேடம்'

'வேணாம் வித்யா...
பையனா இருந்தா...?
யாரா இருந்தாலும் வேண்டாம்... 
ஒண்ணை வச்சிக்கிட்டே நம்மால மேய்க்க முடியலை...'

'ஏழரைன்னா என்னப்பா?
அது ஒண்ணும் இல்லைப்பா... இனி எழரை வருசத்துக்கு அப்பாவுக்கும் அம்மாவுக்கும்தான்  டவுசர் கிழிகிழியின்னு கிழியப்போகுது...
அப்ப என் டவுசர் கிழியாதுல்ல'

'எதுக்குப்பா எல்லாரும் வரிசையில நிக்கிறாங்க.. வாங்கப்பா நாம் வேற ஸ்கூலுக்குப் போகலாம்.
இதுதான் இருக்கதுலயே பெஸ்ட் ஸ்கூல்... எல்லாரும் புள்ளைங்க பர்ஸ்ட் மார்க் வாங்கணுமின்னு ஆசை... எனக்கும்தான்
இருக்கது ஒரு பர்ஸ்ட் மார்க்தானேப்பா... அப்புறம் எப்படி எல்லாருக்கும் கிடைக்கும்' 

இப்படி இன்னும் நிறைய.... நிறைய வசனங்கள் நச்சென....


இந்த நயனாவும் கவினும் கலந்த கலவைதான் எங்க விஷால்... இவனை முதலில் ஆஸ்டல்ல கொண்டு போய் விடணும் என்று சொல்லும் என் மனைவி, சிரித்தே மழுப்பும் நான்... இப்படியாகத்தான் எங்கள் வாழ்க்கை நகர்கிறது. என் மனைவி இன்று படம் பார்த்துவிட்டு சொன்ன வார்த்தை 'அப்படியே நம்ம விஷாலை திரையில் பார்க்கிற மாதிரி இருந்தது' என்பதுதான். ஆன எங்க ஹீரோ அவங்க அம்மாக்கிட்ட என்ன சொன்னாராம் தெரியுமா..? 'ஆஸ்டல்ல கொண்டு போய் விட்டோடனே அழுகை வந்துருச்சி.. அப்புறம் பேய் கதை சொன்னாங்களா நானும் சிரிச்சிட்டேன்' என்பதே மாலையில் போனில் சொல்லிச் சிரித்தார்.

நயனா(வைஷ்ணவி)வின் பெற்றோராக கார்த்திக் - பிந்து மாதவி, கவின்(நிஷேஷ்) பெற்றோராக முனீஸ்காந்த் -வித்யா இவர்கள் நால்வரும் நடித்திருக்கிறார்கள் என்பதைவிட சேட்டை செய்யும் அந்தக் குழந்தைகளோடுடன் போராடும் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். திருட்டுப் பழக்கம் உள்ள முனீஸ்காந்த் மகனின் கடிகாரம் உள்பட சின்ன சின்ன பொருட்களை சுடுவதும் அதை விட முடியாமல் தவிப்பதும் கலக்கல். சமுத்திரக்கனி ஒரே சீனில் வந்தாலும் பேசும் வசனங்கள் எல்லாமே நெத்தியடி.

அரோவ்கெரோலியின் இசையும் பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும் அருமை... குழந்தைகளை வைத்து தனியார் பள்ளிக்கூடங்கள் செய்யும் கல்வி வியாபரத்தை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு சூப்பர் ஹீரோவையும் அமலா பால் போன்ற நடிகையையும் வைத்துக் கொண்டு குழந்தைகள் உலகத்துக்குள் வாழ்ந்து காட்டுவது என்பதும் சாதாரண வேலையில்லை... அதை பாண்டிராஜ் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். சிம்புவிடன் இது நம்ம ஆளு என்று மாட்டிக் கொண்டு தவிக்கும் இயக்குநர் இது போன்ற படங்களை எடுக்கும் இயக்குநர்கள் இல்லாத குறையை இன்னும் பல படங்கள் எடுத்து தீர்த்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கலாம்.


மொத்தத்தில் பசங்க 2 குழந்தைகளுக்கான படம் அல்ல... இது பெற்றோர்களுக்கான பாடம்.
-'பரிவை' சே.குமார்.

13 எண்ணங்கள்:

மகிழ்நிறை சொன்னது…

இத்தனை நீண்ட பின்னூட்டம், படத்தில் உங்கள் ஈடுபாட்டையும், பார்க்கவேண்டிய அவசியத்தையும் பளிச்சுன்னு சொல்லுது. புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா! இந்த படம் அவசியம் பார்க்கிறேன்.

ராஜி சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துகள். நாங்கள் படங்கள் பார்ப்பதில்ல. இந்த படத்துக்கு போகனும்ன்னு ஆசை வந்துட்டு.

balaamagi சொன்னது…

பார்க்கனும், புத்தாண்டு வாழ்த்துக்கள், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்.

KILLERGEE Devakottai சொன்னது…

விமர்சனம் நன்று வசனங்களை ரசித்தேன் நண்பரே...

ஸ்ரீராம். சொன்னது…

பார்க்க வேண்டிய படம்.

தமிழ்மணம் வேலை செய்யவில்லையே...

ஸ்ரீராம். சொன்னது…

தம +1

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பார்க்க வேண்டிய படம். எல்லோரும் புகழ்கின்றார்கள் படத்தை. இப்படியான நல்ல படங்கள் வந்தால் நல்லதே. இதைப்பார்த்தாவது மாற்றம் வந்தால் நல்லது...பார்க்கின்றோம் நிச்சயமாக. உங்கள் கருத்துகளும் அருமை. பகிர்வுக்கு நன்றி குமார்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கண்டிப்பாக பாருங்கள். அவசியம் பார்க்க வேண்டிய படம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அக்கா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கண்டிப்பாக பாருங்கள். அவசியம் பார்க்க வேண்டிய படம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
கண்டிப்பாக பாருங்கள். அவசியம் பார்க்க வேண்டிய படம்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க அண்ணா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க துளசி சார்...
உண்மைதான் அருமையான படம்...
இதுபோல் அதிகம் படங்கள் வர வேண்டும்...
தங்கல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.