மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

வெள்ளி, 5 டிசம்பர், 2014

வெள்ளந்தி மனிதர்கள் : 5. அண்ணன் முருகன்


ந்த பகிர்வில் முருகன் அண்ணனைப் பற்றிய சில நினைவலைகள். கல்லூரியில் படிக்கும் போது நானும் முருகனும் (இது நண்பன்)  ஐயாவின் மூலமாக பாரதி கலை இலக்கியப் பெருமன்றத்தில் உறுப்பினரானோம். அப்போது அதன் செயலாளராக இருந்தவர்தான் தேவகோட்டை தொலை தொடர்புத்துறையில் பணி புரிந்த முருகன் அண்ணன். பரப்பரபாக வேலை செய்யும் மனிதர். பெரியவர்களிடம் எல்லாம் சொல்லுங்க ஐயா என பவ்யமாய் நின்று பணி செய்யும் பண்பாளர்.


எல்லோரையும் போலத்தான் அவரிடமும் பழகினோம். மாதக்கூட்டங்களுக்கு உறுப்பினர் அனைவருக்கும் தபால் அட்டை அனுப்புவது செயலரின் பணி. அப்போது அவருக்கு உதவி செய்ய நாங்களும் தபால் அட்டை எழுத ஆரம்பித்தோம். அப்படியே அவருடைய மனதிலும் ஒட்டிக் கொண்டோம். இலக்கியப் பெருமன்ற வேலைகளில் எல்லாம் அவருக்கு துணையாய் நிற்பதால் அவருக்கு எங்களை ரொம்பப் பிடிக்க ஆரம்பித்தது. எந்த வேலை என்றாலும் குமார்... முருகா என்றுதான் அழைப்பார். எங்களுக்குள் அந்தளவுக்கு ஒரு பாசப்பிணைப்பு இருந்தது. அதன் காரணமாக அவரின் அன்புத் தம்பிகள் ஆனோம்.

மாலை நேரங்களில் எங்கள் கல்லூரி கூட்டணி  எப்பவும் ஐயா வீட்டில்தான் அரட்டை. சில நாட்களில் நானும் முருகனும் நேராக அண்ணாநகரில் இருந்த முருகண்ணன் வீட்டுக்குப் போயிருவோம். அங்க போனதும் அண்ணி சூப்பரா ஒரு காபி கொடுப்பாங்க... பசங்க அப்பத்தான் பள்ளிக்கூடம்ம போனாங்க...  அங்க கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துவிட்டு ஐயா வீட்டுக்கோ அல்லது கலை இலக்கியப் பெருமன்ற வேலைகள் இருந்தால் தலைவர் சவரிமுத்து ஐயா வீட்டுக்கோ செல்வோம்.

பாரதி விழா நாட்களில் போட்டிகள், ஊர்வலம், பட்டிமன்றம், கவியரங்கம் என பரபரப்பாக நிகழ்ச்சிகளை நடத்துவார். அந்த நாட்களில் நம்மளையும் அங்கிட்டு இங்கிட்டு அசைய விடமாட்டார்.  வேலை... வேலை... வேலை மட்டுமே. மாலை அடிகளார் அவர்கள் சிறப்புரை ஆற்றுவார்கள்... விழா நடக்கும் போது சவரிமுத்து ஐயாவும் முருகண்ணனும் மண்டப வாயிலில் நின்று கொண்டு வருவோரை வரவேற்கவும் மற்ற விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக இரவு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து அதைக் கொண்டு வந்து அனைவரையும் சாப்பிட வைத்து அனுப்புவதில் இவருக்கு பெரும் பங்குண்டு.

அக்கா பொண்ணை மோசமான நிலையில் மதுரை ஜவகரில் வைத்திருந்த சமயம் வீட்டில் போன் எல்லாம் இல்லை, தேவகோட்டையில் இருந்து எஸ்.டி.டி.யில்தான் கூப்பிடணும். அந்தச் சமயத்தில் இவருக்கும் மதியமும் இரவும் பணி... நானும் முருகனும் ஐயா வீட்டில் அரட்டை முடித்து நேராக டெலிபோன் எக்சேஞ்ச்க்குப் போயிருவோம். அதிலும் இவரின் அறைக்கு நேரடியாகச் செல்வோம். டிரங்கால் வசதி செய்து கொடுக்கும் பணி இவருக்கு... முருகனின் அண்ணன் அங்கு ஜேடிஓவாக இருந்ததால் எங்களுக்கு அங்கு செல்வாக்கு இருந்தது, அந்த செல்வாக்கை வைத்துத்தான் தேவகோட்டையில் இருந்து எங்க ஊருக்கு டெலிபோன் இணைப்பு கொண்டு போனோம். சரி... முருகண்ணன் கதைக்கு வருவோம்.

அங்கிருந்து மருத்துவமனைக்கு போன் பண்ணிப் பேசுவோம்... தினம் தினம் போனில் மருமகளின் நிலையை அறிந்து கொள்வோம். சில நாட்களில் பகல் வேலை என்றாலும் அவரே போன் பண்ணி விவரம் கேட்டுக் கொள்வார். மாலையில் என்னை அழைத்துக் கொண்டு போய் விசாரிக்கச் சொல்வார். அவரின் தம்பி திருமணத்து அவரது சொந்த ஊருக்குச் சென்று வந்தோம். அவருக்கு ரொம்ப சந்தோஷம்...

நாங்கள் நடத்திய மனசு என்ற கையெழுத்துப் பிரதிக்கு மரமும் மனிதனும் என்ற கவிதை எழுதிக் கொடுத்தார். அப்போதுதான் அவருக்குள் ஒரு நல்ல கவிஞன் இருப்பதைக் கண்டு கொண்டோம். பின்னர் தொடர்ந்து அவரிடம் கவிதை வாங்கி எங்களது மனசில் போட ஆரம்பித்தோம். பாரதி விழாவில் கூட கவிதை எல்லாம் வாசித்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை எழுத்தைத் தொடரவில்லை.

பின்னர் காரைக்குடிக்கு மாற்றலாக, அங்கு இடம் வாங்கி வீடு கட்டி குடியேறிவிட சில காலம் பாரதி விழாவுக்கு வந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் காரைக்குடி கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு மாறிவிட்டார். காரணம் தேவகோட்டைக்கு வருவதில் இருந்த சிக்கல் என்றாலும் ஐயாவுடனான மனக்கசப்பும்தான். பின்னர் சில முறை பார்த்துக் கொண்டோம். போனில் பேசியதும் உண்டு. அதன் பின்னான நாட்களில் வாழ்க்கை அங்கு இங்கு சுற்ற வைத்து தொடர்பு எல்லைக்கு வெளியே தள்ளியதும் உறவுக்குள் எல்லைக்கோடு விழுந்து விட்டது.

இப்ப அண்ணனின் குழந்தைகள் இருவரும் கல்லூரி படிப்பார்கள்...  லெனின் மேல் கொண்ட அன்பினால் பையனுக்கு லெனின் என்றும் பெண்ணுக்கு தமிழ் இலக்கியா (அப்படித்தான் ஞாபகத்தில் இருக்கு) என்றும் வைத்திருந்தார். இறை அருளால் மனைவி மக்களுடன் எங்கள் முருகண்ணன் சந்தோசமாய் இருப்பார் என்று நினைக்கிறேன். நலமோடு வாழட்டும்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள்.
-'பரிவை' சே.குமார்.

6 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…


அண்ணாநகர் வீதியில் நானும் கூடவே பயணித்தது போலிருந்தது தங்களின் முருகண்ணன் அவர்கள் நலமுடன் வாழ எமது வாழ்த்துகளும்.
த.ம.2

Kasthuri Rengan சொன்னது…

நினைவோடை அருமை
த ம மூன்று

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முருகண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிய நினைவலைகள்......

Unknown சொன்னது…

மலரும் நினைவுகளில் மலர்ந்த பதிவும் சுவைதான்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இனிய நட்பின் மலரும் நினைவுக்ள்!