மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 9 நவம்பர், 2014

வெள்ளந்தி மனிதர்கள் : 4. பேராசிரியர் கே.வி.எஸ்

னது பேராசிரியர் கே.வி.சுப்பிரமணியன் (கே.வி.எஸ்) அவர்கள் எங்கள் துறையின் தற்காலிக தலைவராக இருந்தார். முதல்வராக இருந்த எங்கள் துறைப் பேராசிரியர் அவர்கள் இடையில் சில மாதங்கள் துறைத் தலைவராக இருந்தாலும் நாங்கள் படித்த மூன்றாண்டுகளில் பெரும்பாலும் இவரேதான் துறைத் தலைவராக இருந்தார். 

மதுரையை சொந்த ஊராகக் கொண்ட எங்கள் மதிப்பிற்குரிய பேராசிரியர் கே.வி.எஸ். அவர்கள் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு நடந்துதான் வருவார். இருபது நிமிடங்கள் முன்னரே வந்துவிடுவார். கையில் மதிய உணவு பேக்குடன் சட்டையின் முதல் பட்டனைக் கழற்றிவிட்டு காலரைத் தூக்கி பின்புறமாக விட்டபடி அவர் வேகவேகமாக நடந்து வரும் அழகே தனிதான். கரும்பலகையில் எழுதும் எழுத்துக்கள் அச்சில் கோர்த்தது போல் இருக்கும். மிகச் சிறந்த அறிவாளி, பல விஷயங்களைத் துல்லியமாகப் பேசுவார். மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதிலும் அவர்களை தான் நடத்தும் பாடத்தை கவனிக்க வைப்பதிலும் கில்லாடி. கே.வி.எஸ் என்றால் எங்க துறை மட்டுமல்ல மற்ற துறை மாணவர்களுக்கும் ஒரு கிலி உண்டு.

கல்லூரியில் அடியெடுத்து வைத்த முதல் நாள் முதல் பாடவேளை இவர்தான் வந்தார். தனது அறிமுகம் முடித்து எங்களைப் பற்றி அறிமுகத்தைக் கேட்டுவிட்டு பாடம் எடுக்க ஆரம்பித்தார். ஆரம்பமே ஆங்கிலம்தான்... எங்கள் கல்லூரியில் படிப்பவர்கள் பெரும்பாலும் கிராமத்து மாணவர்களே... அதிலும் தமிழ் வழிக்கல்விதான் படித்து வந்திருப்பார்கள் என்பது அவருக்கும் தெரியும். இருந்தும் ஆங்கிலத்தில் ஆரம்பித்தார். இன்ட்ரோடக்சன் (introduction) என்று சொல்லும் போது 'ஷன்' என்று முடியும் போது ஒரு சீட்டி (விசில்) அடித்த சத்தம் வரும். அவரது ஆங்கில உச்சரிப்பு அப்படி அழகானது. இப்படி பெரும்பாலான வார்த்தை உச்சரிப்பில் சீட்டி அடித்தார். வகுப்பில் அனைவரும் சிரித்து விட்டோம். உடனே பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு 'எதுக்குச் சிரிக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும் போது விசில் அடிக்கிறாரேன்னுதானே... உச்சரிப்புங்கிறது இப்படித்தான் இருக்கணும். சும்மா பேசுற எல்லா வார்த்தையும் ஒரே மாதிரி இருக்கக்கூடாது... இதுவரைக்கும் எப்படியோ தெரியாது... இனி ஆங்கிலத்தில்தான் படிக்கணும்... எழுதணும்.. அப்பத்தான் கல்லூரி முடித்துச் செல்லும் போது ஓரளவு ஆங்கில அறிவோடு வெளிய போக முடியும்.' என்று சொல்லி விட்டு தொடர கொஞ்ச நாளில் அவரின் உச்சரிப்பு எங்களுக்குப் பழகிவிட்டது.

எங்கள் கல்லூரியில் இரண்டு பிரிவாய்த்தான் மாணவர்கள் இருப்பார்கள். ஒன்று தேவகோட்டை மற்றொன்று திருவாடானை. இரண்டுக்கும் இடையில் எப்பவும் அடிதடிதான். வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது சொல்லும் வார்த்தையில் 'டி'('D/T') வந்ததென்றால் அதை ஒரு சிலர் குச்சி 'டி'யா இல்ல குண்டு 'டி'யா என்பார்கள். பெரும்பாலான மாணவர்கள் தேவகோட்டை 'டி'யா திருவாடனை 'டி'யா என்று கேட்பார்கள். எங்கள் பேராசிரியரைப் பொறுத்தவரை ஒரு வார்த்தை தெரியவில்லை என்றால் அதை எழுதிப் போட்டு விடுவார். மேலும் வகுப்பிற்குள் திருவாடானை டியும் தேவகோட்டை டியும் வர வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையா இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் எங்கள் வகுப்பில் மூன்று கோஷ்டி, ஒண்ணு தேவகோட்டை மற்றது திருவாடனை. இரண்டிலும் இணையாத இரண்டுங்கெட்டான நாங்கள் பத்துபேரும் தனிக் கோஷ்டி. எங்களை எங்கள் ஆசிரியர்கள் எல்லாருக்குமே பிடிக்கும். அந்த வகையில் மூன்றாண்டுகள் அவர்களின் மனசுக்குப் பிடித்த மாணவர்களாக நாங்கள் இருந்தோம் என்பது சந்தோஷமான விஷயம்தான். கல்லூரியில் சண்டை என்றால் எங்களை வீட்டுக்குப் போங்க... இங்க எதுக்கு நிக்கிறீங்க என விரட்டுவார். எங்கள் மீது யார் தவறு சொன்னாலும் அதை எங்கள் கே.வி.எஸ். சார் ஒத்துக் கொள்ளவே மாட்டார். ஒரு முறை எங்களுக்காக பிரின்ஸ்பால் வரை சென்று பேசியிருக்கிறார்.

இரண்டாம் ஆண்டு படிக்கும் போது வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு சைக்கிளில் பிள்ளையார்பட்டி போய் சுற்றிவிட்டு மாலை திரும்பினோம். அடுத்த நாள் முதல் பாடவேளை கே,வி.எஸ். சார் வகுப்பிற்கு வந்ததும் பசங்க எல்லாம் எந்திரிங்க என்று சொல்ல எல்லோரும் எழுந்தோம். நேற்று உங்களுக்கு எல்லாம் கல்லூரியில்லையா என்று கேட்டதும்தான் நாம பிள்ளையார்பட்டி போனோம் மற்ற ரெண்டு கோஷ்டியும் எங்க போனானுங்க என்று எங்களுக்கு குழப்பமாக இருந்தது. நாங்கள் பிள்ளையார்பட்டி போனோம் என்றதும் எல்லோருமே கிளிப்பிள்ளை போல் அதையே சொல்ல, எல்லாரும் வெளிய போங்க... நாளைக்கு பெற்றோரைக் கூட்டிக்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டு பொண்ணுங்களுக்கு மட்டும் வகுப்பு எடுத்தார். வகுப்பு முடிந்து வெளிய வந்தவரிடம் சார் மன்னிச்சிக்கங்க என்று கொஞ்ச படிக்கிற புள்ளங்க இப்படிப் பண்ணலாமா இது முதல் முறைங்கிறதால விடுறேன்... இனி இப்படி நடக்ககூடாது. அவனுக கூட எதுக்கு சுத்தப் போறீங்க என்று திட்டினார். அவனுகளிடம் ஏன்டா பிள்ளையார்பட்டி போனோம் என்று சொன்னீர்கள் என்று கேட்டால் நீங்க சொன்னதை சொன்னாத்தான் எங்களையும் விடுவார்... இல்லைன்னா விட்டு விளாசியிருப்பாருல்லன்னு சொன்னானுங்க.

மதிய நேரத்தில் எங்கள் பாட்டுக் கச்சேரி களை கட்ட ஆரம்பித்த நாட்களில் அடுத்த அறையில் அமர்ந்து அதை ரசித்துக் கொண்டிருந்தவர், பொம்பளப்புள்ளங்க கூட்டம் கூட்டமாக தண்ணீர் குடிக்க வரவும் ஒரு பெண்புறா பாட்டை நம்ம சூசை அற்புதமாக அடிக்கடி பாட ஆரம்பிக்கவும் பயலுக புள்ளைகளுக்கு ரூட் விடுறானுங்களோன்னு அவருக்கு சந்தேகம் வர ஆரம்பித்ததும் நேரே எங்களிடம் வந்தார். அவரைக் கண்டதும் எழுந்து நிற்க, மத்தியானத்துல எங்கிட்டும் போயி சுத்தமா சண்டையிழுக்காம வகுப்புக்குள்ள உக்காந்து சந்தோஷமா பாடுறது நல்லாத்தான் இருக்கு... ஆனா தண்ணி குடிக்க ஆளில்லாம கிடந்த தண்ணிப் பானைக்கிட்ட பொண்ணுங்க கூட ஆரம்பிச்சிட்டாங்க... பிரின்ஸ்பால் வரைக்கும் போயிடும்... கொஞ்சம் சத்தத்தைக் குறைச்சிக்கங்க என்று சொல்லிச் சென்றார். பின்னர் இந்தப் பிரச்சினை பிரின்ஸ்பால் வசம் போனபோது துறைத்தலைவர் என்ற முறையில் இவருக்கு அழைப்பு வர எங்க பிள்ளைங்க மற்ற துறை மாதிரி சண்டைக்குப் போகலை சார். ஓய்வு நேரத்துல வகுப்புக்குள்ள உக்காந்து பாட்டுப் பாடி சந்தோஷப்படுறாங்க... வேணுமின்னா தண்ணிய வேற இடத்துல மாத்தி வையுங்க என எங்களுக்காக பேசி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

என் மீது எப்பவும் தனிப்பட்ட அன்பு வைத்திருப்பார். குமார் என்று அவர் அழைப்பதில் ஒரு அன்னியோன்ய அன்பு தெரியும். ஐந்தாவது செமஸ்டர் முடிவுகள் வந்த அன்று எங்களுக்கு வகுப்பு இல்லை என்பதால் நாங்கள் அனைவரும் தேவகோட்டை சரஸ்வதி திரையரங்கில் ரத்தக்கண்ணீர் படம் பார்த்து விட்டு வெளியே வர, ஒரு நண்பன் ரிசல்ட் வந்திருச்சு என்று சொல்ல எங்கள் சைக்கிளிலும் வாடகை சைக்கிளிலுமாக கல்லூரிக்கு விரைந்தோம். எங்களைப் பார்த்ததும் என்ன ரிசல்ட் என்னாச்சுன்னு பாக்க வந்தீகளா அப்படின்னு கேட்டுட்டு என்ன குமார் ஏன் என்னாச்சு... என்று என்னிடம் கேட்டு விட்டு மற்றவர்களின் மார்க்கைச் சொல்ல ஆரம்பிக்க எனக்கு என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. வகுப்பில் முதல் மாணவனாக நானும் மாணவியாக மல்லிகாவும் போட்டு போட்டு வந்து கொண்டிருந்தோம். இதுவரை ஆங்கிலத்தில் கூட அரியர் வைத்ததில்லை. என்ன ஏதுன்னு தெரியாம வேர்க்க ஆரம்பித்தது. எல்லாருக்கும் சொல்லிவிட்டு இங்க வாங்க என்று அழைத்தார்.

அருகே சென்று நிற்க எழுதிக்கிறீங்களா என்று சொல்லி மார்க்கைச் சொல்லிக் கொண்டே வந்தார். ஒரு மேஜரில் 28 என்று சொல்லி என் முகத்தைப் பார்த்தார். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ஐந்தாவது செமஸ்டரில் அரியர்... அதுவும் இன்டர்னல் மார்க் 21 இருக்க 7 மார்க் மட்டுமே வாங்கி கல்லூரி வாழ்வில் முதல் அரியர். என்னாச்சு.. நல்லா எழுதலையா? என்று கேட்டார். இல்ல சார் நல்லாத்தான் எழுதினேன். எப்படி இப்படின்னு தெரியலை... மத்ததெல்லாம் 80க்கு மேல் இருக்கும் போது இது... மெதுவாக இழுத்தேன். அழுகை வேறு எட்டிப் பார்த்தது. எனக்குத் தெரியும் நீங்க எப்படி எழுதியிருப்பீங்கன்னு... எதோ தவறு நடந்திருக்கு... நாம ரீவால்யூவேசன் போடுவோம் என்றவர் அருகே இருக்கும் தமிழ் டிபார்ட்மெண்ட் பக்கம் திரும்பி பழனி ஐயாவிடம் 'பழனி சார்... குமாருக்கு ஒரு சப்ஜெக்ட்ல மார்க் தப்பா வந்திருக்கு.. ரீவால்யூவேசன் போட்டுடுவோம்.' என ஐயாவிடம் சொல்ல, 'தம்பிய பத்தி எனக்குத் தெரியும்.. போட்டுடுவோம்' என அவரும் சொல்ல அதன் பின் வந்த நாட்களில் அவரே அப்ளிகேசன் வாங்கி எனக்காக அதை பில்லப் பண்ணி நானே பணம் கட்டுறேன் என்று சொல்ல ஐயா மறுத்து நான் கட்டுறேன் என்று அவர் பணம் கொடுக்க கே.வி.எஸ். சாரே அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்தார். பின்னர் ஐயாவிடம் நான் பணம் கொடுத்தேன்.

ஆறாவது செமஸ்டருக்கு பணம் கட்டச் சொல்லி விட்டார்கள், ரீவால்யூவேசன் போட்டது என்ன ஏது என்ற விவரமே இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. சாரும் மதுரை காமராஜ் யுனிவர்சிட்டிக்கு போனெல்லாம் பண்ணிக் கேட்டுப் பார்த்துவிட்டு முதல்வரிடம் ஒரு கடிதம் வாங்கி என்னை நேரில் போகச் சொன்னார். சரியான பதில் கிடைக்காததால் காசு போன போகட்டும் அரியருக்கு பணத்தைக் கட்டிடலாம் என்று சொல்லிவிட்டார். பின்னர் அரியருக்கு பணம் கட்டி பரிட்சை எழுதியாச்சு. ரிசல்ட் வரப்போகும் சமயத்தில் ரீவால்யூவேசன் ரிசல்ட் வீட்டிற்கு வந்தது. அதில் 53 மார்க் போட்டு அனுப்பியிருந்தார்கள். ஐந்தாவது செமஸ்டர் மார்க் சீட்டோடு யுனிவர்சிட்டி வந்து இந்த மார்க்கை அதில் பதிந்து வர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். அவரிடம் சென்று காண்பித்த போது ரிசல்ட் வரட்டும் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டார். ரிசல்ட் வந்தது அந்தப் பேப்பரில் 87 மார்க் வந்திருந்தது. ரீவால்யூவேசன் ரிசல்டை கிழித்து வீசுங்க... இந்த மார்க்கை அவனுக்களே ஏத்திருவானுங்க என்று சொல்லிச் சிரித்தார்.

கல்லூரி முடித்ததும் அந்தப் படிப்புக்கு போ... இதைப் படி என்றெல்லாம் வீட்டுக்கு வரச்சொல்லி அட்வைஸ் பண்ணினார். நம்ம சுழி எங்க சொல்லக் கேட்டுச்சு... மாடு நுனிப்புல்லு மேயுற மாதிரி அது இதுன்னு வாய் வச்சி கடைசியில கம்ப்யூட்டருக்குள்ள வந்து மாட்டிக்கிட்டாச்சு. திருமணத்துக்குப் பிறகு மதுரையில் மனைவி வீட்டுக்குப் போகும் போது ஒரு முறை கே.வி.எஸ். சாரை பார்த்தேன். அப்பவும் அதே நடைதான்... என்னைப் பார்த்ததும் அவருக்கு மிகுந்த சந்தோஷம்... அதே சிரிப்பு... என்னிடம் ரொம்ப நேரம் பேசியவர் வீட்டுக்கு வாங்க என்று அழைத்தார். அப்போது வருகிறேன் என்று சொல்லி முகவரி வாங்கி வந்தேன். அதன் பிறகு அங்கிட்டு போகவேயில்லை. ஒரு சில முறை ஐயாவிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன்.

சாருக்கு எதோ ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்தது என்றும் அதன் பின்தான் அவர் நடந்தே வருகிறார் என்றும் கல்லூரியில் சொல்வார்கள். அவருக்கு குழந்தையும் இல்லை... ஒரு பையனை தத்தெடுத்து வளர்த்தார். மாலை நேரங்களில் மகனைக் கையில் பிடித்துக் கொண்டு பேசியபடியே நடந்து வருவார். நானும் முருகனும் ஐயா வீட்டில் இருந்து அந்த வழியாக வருவோம்... என்ன பழனி சார் வீட்டிலிருந்தா... கொடுத்து வைத்த மாணவர்களய்யா நீங்க என்று சொல்லிச் சிரிப்பார். இன்னமும் எங்கள் கே.வி.எஸ் சாரின் சிரிப்பு மனசுக்குள் சிரித்துக் கொண்டே இருக்கிறது. அவரது நல்ல குணத்துக்கு நோய் நொடி இல்லாது நீண்ட காலம் சந்தோஷமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

அடுத்த வெள்ளந்தி மனிதர்களில் அன்பிற்குரிய அண்ணன் முருகன் (தொலைபேசித் துறை) அவர்கள் குறித்த சில நினைவுகளை மீட்டெடுப்போம்.

வெள்ளந்தி மனிதர்கள் தொடர்வார்கள். 
-'பரிவை' சே.குமார்.

11 எண்ணங்கள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நாளை படிக்கிறேன் நண்பா,,,,

ப.கந்தசாமி சொன்னது…

ரசித்தேன்.

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

வெள்ளந்தி நெஞ்சத்தைச் சொல்லேந்தித் தந்துள்ளீா்!
உள்ளேந்திக் கொண்டேன் உவந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

ஷைலஜா சொன்னது…

மனசுக்குள் வந்தோம் வெள்ளந்திமனிதர்களைப்பற்றி மேலும்
தொடர்க!

சென்னை பித்தன் சொன்னது…

இவர் போன்றவர்கள் பாடம் நடத்துவது மட்டுமின்றிப் பாடமாகவே இருப்பவர்கள்
நல்ல பகிர்வு குமார்

ஸ்ரீராம். சொன்னது…

இது மாதிரி ஆசிரியர்கள் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும். என் மனதிலும் இடம் பிடித்து விட்டார் திரு கே வி எஸ்.

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுகு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான மனிதரை பற்றிய சிறப்பான பகிர்வு! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆசான் பற்றி அருமையான பதிவு
தம+1

Yarlpavanan சொன்னது…

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹ! என்ன சிறப்பான ஆசிரியர் கொடுத்துவைத்தவர்தான் னீங்கள் ! நாங்களும் திரு கேவிஎஸ் க்காகப் பிரார்த்திக்கின்றோம்! நண்பரே!