மனசுக்குள் நுழைந்தவர்கள்..!..

ஞாயிறு, 14 நவம்பர், 2010

மழைநாளில் அம்மா..!


"என்ன தனக்கா... வாசல்ல நிண்டு யாரைப் பாத்துக்கிட்டிருக்கே..."

"இந்த பாண்டிப்பயல அவுக சின்னத்தா வூட்டு வரெக்கும் போயிட்டு வரச்சொன்னே. இன்னும் வரலை அதான் பாத்துக்கிட்டிருக்கே..."

"பாண்டி என்ன சின்னப்புள்ளையா... வந்திருங்க்கா... இதுக்குப் போயி பயப்படுறே."

"அடி பயப்படலைடி... வானங் கருத்துக்கிட்டு வருது... மழ வந்தா ஒதுங்கக்கூட இடமில்லை... எப்படி வாரனோ என்னவோ... தெரியலை..."

"நம்ம வாத்தியாரு வூட்ல போயி போன் பண்ணிப் பாக்கவண்டியதுதானே..."

"பாத்தாச்சி... அங்க போன் வேலை செய்யலை போலன்னு சொன்னுச்சு"

"அப்ப பேசாம இரு பாண்டி வந்திரும்... ஆத்தாடி தூத்தப் போட ஆரம்பிச்சிருச்சி... நான் வாரேங்கா.."

"எங்கடி மழயில போறே... "

"கிடையில ஆடு கிடந்துச்சு... அதை கொட்டயக்கில்ல அடச்சிட்டு வர போறேன்..." என்றபடி அவள் சேலையை குடையாக்கிக் கொண்டு ஓட 'சடச் சட'வென மழை பெரிதாகியது.

'இந்தப் பயலை இதுக்குத்தான் போகச் சொல்றதே இல்லை. சின்னத்தா வூட்டுக்குப் போனா வர மனசு வராது. இனி மழயில நனைஞ்சுக்கிட்டு வந்து காச்சல்ன்னு படுக்கப்போகுதோ என்னவோ' என்று புலம்பியபடி ஓட்டில் இருந்து வழியும் மழைத்தண்ணீரைப் பிடிக்க குடங்களை வரிசையாக வைக்கலானாள்.

அப்போது மின்சாரம் போக, 'பாயிவரப்பானுக லேசா மழ வந்துட்டா போதும் உடனே கரண்ட வெட்டிப்புடுவாங்க... இனி எப்ப வரப்போகுதோ தெரியலை... இன்னங்காணும் பாத்தியா இந்தப் பயலை... மழக்கு சின்னத்தா வூட்ல இருந்துட்டு வந்தாலும் பரவாயில்லை. கிளம்பிருச்சோ என்னவோ...' மனதுக்குள் மகன் மட்டுமே பிரதானமாய் இருந்தான்.

வாசலில் சைக்கிள் வரும் ஓசை கேட்க, வேகமாக எட்டிப்பார்த்தாள். பக்கத்து வீட்டு சோலை நனைந்து கொண்டே சென்றான், 'மாப்ள... உங்க மச்சானை அங்கிட்டுப் பார்த்தியலா...?' என்று கேட்டு வைத்தாள்.

"இல்ல அயித்தை... எங்க போச்சு...?" என்றான் சைக்கிளில் இருந்து இறங்காமல் காலை ஊனியபடி.

"சின்னத்தா வூட்டுக்குப் போனபய இன்னும் வரலை"

"மழைக்கு எங்கினயாவது நிக்கும்... வந்துடும்..."

"சரி நீ எதுக்கு நனையுறே... போயி நல்லா தலயத் தொவட்டுப்பா..."

"ம்..."


ன்னும் பாண்டி வரவில்லை... மின்சாரமும் வரவில்லை.

'பேய் மழ பெய்யுது... எங்க நிக்கிறானோ தெரியலை... மழ விட்டாலும் மறுபடியும் வாத்தியார் வூட்டுல போயி போன் பண்ணிப் பாக்கலாம்... விடாது போலயே.... சாயங்காலம் ஆச்சினா எங்கிட்டுக் கெடந்து வருமோ தெரியலை தண்ணியா கொட்டிட்டுப் போயிடுது. மழக்கு முன்னாடி வந்திடுடான்னு படிச்சுப் படிச்சு சொல்லிவிட்டேன் நாம சொல்றதே எங்க கேக்குது அது போக்குக்குத்தான் போகுது... ஆத்தி மழ இப்புடி பேயுதே...' என்று தனக்குத்தானே பேசியபடி சாக்கை எடுத்து தலையில் போட்டுக் கொண்டு லண்டியனை எடுத்துக் கொண்டு மாட்டுக் கசாலைக்குப் போனாள்.

மழை நீர் ஒழுததால் தொருத் தொருவென்றிருந்த கசாலைக்குள் மாடுகள் நகட்டி வைத்திருந்தன.

'சை... போன வருசம் கட்டினது அதுக்குள்ள மோடு ஒழுகுது... என்னதான் கட்டுறாங்களோ... காசு மட்டும் கறாரா கேக்கிறாங்க... மாடு நிக்க நல்ல இடம் இல்லை... மோடு கட்டணும் அதுல கை வச்சா ரெண்டாயிரம் வேணுமின்னு அவரு காதுல வாங்கிக்க மாட்டேங்கிராரு... பாவம் படுக்க எடமில்லாம நகட்டி வச்சிருக்குக...' என்றபடி வைக்கலை அள்ளிப்போட்டாள். மோந்து பார்த்துவிட்டு பேசாமல் நின்றன.

"ஏ... ஈரமா இருக்கோ... புல்லு வெட்டியாந்து போட்டா நல்லா சாப்பிடுவிய... அதுக்கும் மழ பேஞ்சு தரையெல்லாம் தண்ணி நிக்கயில எங்கிட்டு புல்லு வெட்டப் போறது... இன்னிக்கு இதுதான்... தின்னா தின்னுங்க இல்லன்னா கிடங்க..." என்றபடி கதவை மூடி கயிரால் கட்டிவிட்டுச் சென்றாள்.


ழை லேசாக விட்டது போல் தெரிய வீட்டைப் பூட்டிக் கொண்டு வாத்தியார் வீட்டை நோக்கி நடந்தாள்.

"வா... தனம்... என்ன இந்தப்பய இன்னும் வரலையா..." என்றாள் வாத்தியார் பொண்டாட்டி.

"ஆமா...அதான் ஒரு போன் போட்டுப் பாக்கலாமுன்னு..."

"சரி... என்னங்க... ராமக்கா வீட்டுக்கு போன் பண்ணி பாண்டிப்பய கிளம்பிட்டானான்னு கேளுங்க..."

போன் பண்ணிப் பார்த்த வாத்தியார், "போன் வேலை செய்யலைடி... நான் என்ன செய்ய.... ஆமா... அண்ணன் எங்க?"

"அவுக செட்டிய வூட்டு வேலையா மதுர வரைக்கும் போயிருக்காக... நாளைக்குத்தான் வருவாக..."

"சரி... வந்துடுவான்... எதுக்கு இப்ப பதட்டப்படுறீக... சின்னப்பயலா அவன்... மழை விட்டதும் அவன் வரலைன்னா நாம்ப்போயி ஒரு எட்டு பாத்துட்டு வாரேன்."

"சரிப்பா... நான் வாறேன்."

"மழை விட்டும் வரலைன்னா வாங்க..."

"ம்..."


'ந்தக் காளை எங்க நிக்குதோ... இந்த மழயில... இருட்டுக்குள்ள பயப்புடாம வரணுமே... ஆத்தா மாரி எம்புள்ளய பயப்புடாம கொண்டாந்து சேத்துரு... நாளைக்கு அவங்கையால செதறு தேங்காய் வாங்காய்ந்து ஒடக்கச் சொல்லுறேன்.' என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள்.

அடுத்த மழை ஆரம்பமானது. 'இந்த மழ ஓயாது போலயே... இப்புடி ஊத்துது. பாவம் மாடுக... இந்த மழக்கு தொருத்தொருன்னு கிடக்க கசாலையில படுக்கக்கூட முடியாது.... நாளைக்கு வெட்டருச்சா காளியானைக் கூப்பிட்டு மோட்டுல வக்கலயாச்சும் போட்டு ஒழுகாமச் செய்யணும். அறுப்புக்கு அப்புறம் பணவோலை வெட்டி கட்டிப்புடணும். ' என்று நினைக்கும் போது வந்த மின்சாரம் உடனே போக,

'அட எளவெடுத்தது... வந்திட்டு பொசுக்குன்னு போயிருச்சு... இனி வராது... எங்கயோ கருவ வாது விழுந்து கெடக்கு போல... நாளக்கிப் போயி பயலுக பாத்து வாதுகளை வெட்டி விட்டாங்கனாத்தான் வரும்...... இனி வாரது அப்புடி அப்புடித்தான்.'

மழை சோவென பெய்தது. 'ஆத்தி... இப்புடி அடிச்சுக்கிட்டு ஊத்துதே... இந்தப்பய எங்கயாவது ஒதுங்கியிருப்பானா...' தாய்மனம் எங்க சுற்றியும் மகன் மீதே வந்து நின்றது.

மழை விட்டது போல் தெரிய, வாசலில் நிழலாடியது. 'அப்பா... பாண்டி வந்துட்டான் போல...' என்று நினைத்தவள், "யாரு பாண்டியா" என்றபடி வாசலுக்கு வந்தாள்.

"ம்..."

"ஏய்ய்யா... இப்புடி நனஞ்சுக்கிட்டு வாரே..."

"என்ன பண்ண... சைக்கிள் பஞ்சராயிடுச்சு... நல்ல மழை வேற... வேற என்ன செய்யிறது..."

"உருட்டிக்கிட்டா வந்தே..."

"அப்புறம்... இந்தப் பக்கம் உங்கப்பனா கடை வச்சிருக்கான்... பாதியில இருந்து உருட்டிக்கிட்டுத்தான் வாரேன்."

"ஆத்தி... சுடுகாட்டுப் பாதையாவா வந்தே..."

"ம்... அதுக்கென்ன..."

"பயந்து கியந்து வைக்கலையே..."

"அம்மா... ஏம்மா... நான் ஒண்ணும் சின்னப்புள்ள இல்லை பயப்புட..."

"இல்லப்பா... நிறைய பேர அந்த கருப்பாயி..."

"அம்மா... நா பயப்புடாம வந்தாலும் நீயே பயமுறுத்திடுவே போல... என்னய தலைய தொவட்ட விடும்மா..."

"உனக்கென்ன தெரியும்... "

"எனக்கு ஒண்ணும் தெரிய வேணாம்... ஆத்தா கொஞ்சம் வாய மூடிக்கிட்டு இரு..." என்றபடி டிரஸ்ஸை கழட்டி பிழிந்து காயப் போட்டுவிட்டு தலையைத் தொடைத்துக் கொண்டிருந்தான்.

"என்ன தனக்கா தம்பி வந்துட்டானா..."

"ம்... இப்பத்தான் வந்தான்... ஆமா.. நீ மழக்கு முன்னால ஆடடைக்கப் போனவதானே... இப்பத்தான் வாறியா..."

"ஆமா... சாயந்தரத்துல இருந்து பறந்துட்டியே... "

"ஆமா... பேய் மழ பெய்யுது... என்ன பண்றானோன்னு பதட்டமில்லாம இருக்குமா... அதுசரி இவ்வளவு நேரம் என்னடி பண்ணினே..."

"அது உங்கொழுந்தன் வந்தாக... ரெண்டு பேருமா வாறோம்..."

"சரி.. சரி..." என்று நக்கலாய் சிரித்தவள், "ஏய்ய்யா... கொடய புடிச்சுக்கிட்டு வாத்தியார் சித்தப்பா வூட்டு வரைக்கும் பொயிட்டு நான் இப்பத்தான் வந்தேன்னு சொல்லிட்டு வாய்ய்யா."

"அங்க போன் பண்ணப் போனியா... சித்தப்பா வரும்போது பாத்து ஆத்தா தவிச்சிப் போயிடுச்சுன்னு சத்தம் போட்டாரு... சைக்கிள் பஞ்சருன்னதும் ஒண்ணும் சொல்லலை." என்றவன் "பசிக்குது சாப்பாட போடும்மா" என்றான்.

"சரி வா"

தொண்டையை செருமிக் கொண்டே வந்த பாண்டி 'அஸ்க்' என்று தும்ம, "ஆத்தி... சளி புடிச்சிடுச்சா... சாப்பிட்டு கசாயம் வச்சித் தாரேன். குடிச்சிட்டு படு..." 

"அம்மா ஆரம்பிச்சிட்டியா... சரி... குடிக்கிறேன்.."

"இரு வாரேன்... இங்கிட்டு திரும்பு... மாரி, முனீஸ்வரா, கருப்பா எம்புள்ள மேலுகாலு சுகத்தோட இருக்கணும்... எங்கயும் பயந்திருந்தாலும் எல்லாம் விட்டு விலகிப் போகணும்" என்றபடி அவன் நெற்றியில் துனூறைப் பூச, போயிருந்த மின்சாரம் வந்தது. அவன் வரும்வரை அவள் பட்ட வேதனையும் மகனின் மீதான அதீத பாசமும் அந்த தாயின் நனைந்த கண்களுக்குள் தெரிய, அவனை அறியாமல் கண்கள் குளமாகின.

-'பரிவை' சே.குமார்.


படம் எடுத்தது http://www.mazhalaigal.com-ல்... படம் அருளிய கூகிளுக்கு நன்றி.

32 எண்ணங்கள்:

எல் கே சொன்னது…

ஒரு தாயின் தவிப்பு . அருமை குமார்

r.v.saravanan சொன்னது…

தாயின் தவிப்பை வெளிப்படுத்திய விதம் அருமை குமார்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க எல்.கே...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க சரவணன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

பெற்றவளின் மனதை அருமையாக படம் பிடித்து சொல்லியிருக்கிறீர்கள்....

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

அழகான கதை. மிகவும் பிடித்திருந்தது.

Unknown சொன்னது…

எளிய நடையில் .. அருமையான விவரிப்பு .. உணர்வுகளின் கதை..

Unknown சொன்னது…

கிராமத்துத் தாயின் மழைநாள் தவிப்பு. அருமையான பதிவு.

செ.சரவணக்குமார் சொன்னது…

கதையில் இடம்பெற்றுள்ள வட்டார மொழி மிக அருமை.

Unknown சொன்னது…

தாய் மனசின் தவிர்பை அழகாக சொல்லியிருக்கிங்க சே.குமார் மிகவும் அருமை...

vasu balaji சொன்னது…

romba nallarukku

Vidhya Chandrasekaran சொன்னது…

அருமையாயிருக்கு...

Priya சொன்னது…

நல்ல கதை... வாழ்த்துக்கள்!

சுசி சொன்னது…

நல்லா எழுதி இருக்கிங்க குமார்.

அம்பிகா சொன்னது…

மண்வாசனையுடனும், அம்மாவின் பாசமழையில் அருமையான கதை. நல்லாயிருக்கு குமார்.

ராமலக்ஷ்மி சொன்னது…

மிக நன்று. வாழ்த்துக்கள்!

Menaga Sathia சொன்னது…

எழுத்து நடை ரொம்ப நல்லாயிருக்கு..ஒரு தாயின் தவிப்பைஅ ழகா சொல்லிருக்கிங்க..வாழ்த்துக்கள்!!

ம.தி.சுதா சொன்னது…

அருமையாக இருக்கிறது... தங்கள் தளத்திற்கும் என் ஓடையில் நனைய விட்டுள்ளேன் வந்து பாருங்கள் சகோதரம்... வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran சொன்னது…

// அவனை அறியாமல் கண்கள் குளமாகின //
இப்போது என்னை அறியாமல் என் கண்கள் குளமாகின...

தமிழ் பெஸ்டில் எல்லாம் இணைத்த உங்கள் மன தைரியத்தை பாராட்டி அதிலும் ஓட்டு போடுகிறேன்...

ஹேமா சொன்னது…

குமார்...கதையும் சொன்ன மொழிவழக்கும் விதமும் அருமை.ஒரு தாயின் தவிப்பை அப்படியே நிழலாய்க் கொண்டு வந்திருக்கிறீர்கள்.பாராட்டுகள் !

தமிழ்க்காதலன் சொன்னது…

கதை அருமை. குமார் உங்களுக்கு ஏதோ வசியம் தெரியும்னு நினைக்கிறேன். மிகச் சாதாரணமாக எழுதி அருமையாய் உணர வைத்து விடுகிறீர்கள். உங்கள் வித்தைக்கு நன்றி. தொடருங்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வெறும்பய அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க புவனேஸ்வரி மேடம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செந்தில் அண்ணா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க கலாநேசன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க செ.சரவணக்குமார்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சினேகிதி மேடம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானம்பாடிகள் ஐயா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வித்யா மேடம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க பிரியா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க சுசிக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அம்பிகா மேடம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க மேனகாக்கா...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ம.தி.சுதா...
ரொம்ப நன்றி உங்கள் தளத்தில் நனையவிட்டதற்கு....
பார்த்தேன்... அது என்ன அடைப்புக்குறிக்குள் நம்பர்... விளங்கவில்லை எனக்கு...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க பிரபாகரன்...
தமிழ் பெஸ்ட்டிலும் வாக்களித்த உங்கள் அன்புக்கு நன்றி.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க ஹேமா...
மொழி வழக்கு எங்கள் சிவகெங்கை சீமையின் பேச்சு வழக்குதான்... எனவே எழுதும் போது நாங்கள் அன்றாடம் பேசும் மொழிவழக்கில் எழுதினேன்... அவ்வளவுதான்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க தமிழ்க்காதலன்...
வசியமெல்லாம் ஒண்ணுமில்லேங்க... என்னைவிட எத்தனையோ பேர் அருமையா எழுதுறாங்க... நான் எதோ எழுதுறேன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

vanathy சொன்னது…

super & well written, Kumar.

நிலாமதி சொன்னது…

தாய்மை படும்பாடு கிராமத்து வழக்கில் அழகாய் வந்திருகிறது பாராட்டுக்கள்.

டிலீப் சொன்னது…

தாயை போன்ற சிறந்த சொத்து இவ்வுலகில் இல்லை
அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாங்க வானதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நிலாமதி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க டிலீப்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.